முகப்பு
இந்தியா

28 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் உலக அழகிப் போட்டி

சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு, 71வது உலக அழகிப் போட்டியை இந்தியா தலைமையேற்று நடத்தவிருக்கிறது. 

Updated On : 19 ஜனவரி, 2024 at 6:22 PM
பகிர்:


புது தில்லி: சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு, 71வது உலக அழகிப் போட்டியை இந்தியா தலைமையேற்று நடத்தவிருக்கிறது. 

உலகம் முழுவதும் பலராலும் கவனிக்கப்படும் இந்த உலக அழகிப் போட்டியை, இந்தியா இதற்கு முன்பு கடந்த 1996ஆம் ஆண்டு பெங்களூருவில் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

புது தில்லியில் உள்ள பாரத் மண்டபம் மற்றும் மும்பையில் உள்ள ஜியோ வோர்ல்டு வளாகத்தில் பிப்ரவரி 18ஆம் தேதி முதல் மார்ச் 9ஆம் தேதி வரை உலக அழகிப் போட்டி நடைபெறவிருக்கிறது.

Advertisement

மும்பையில் நடைபெறும் 71வது உலக அழகிப் போட்டியின் இறுதிப் போட்டி மார்ச் 9ஆம் தேதி இரவு 7.30 மணி முதல் 10.30 மணி வரை நடைபெறும் என்று தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மிஸ் வேர்ல்டு அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், வரும் உலக அழகிப் போட்டியை இந்தியா நடத்தவிருக்கிறது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி என்று உலக அழகிப் போட்டியின் தலைவர் ஜூலியா மோர்லி தெரிவித்துள்ளதாகப் பதிவிடப்பட்டுள்ளது.

அழகு, பன்முகத்தன்மை மற்றும் தலைமையேற்றல் போன்ற  கொண்டாட்டங்கள் காத்திருக்கின்றன. ஒரு அற்புதமான பயணத்திற்கு தயாராகுங்கள்! என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, 1966ஆம் ஆண்டு ரெய்தா ஃபரியா பாவெல் தான் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியப் பெண் என்றப் பெருமையைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து 1994ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராய் உலக அழகியா மகுடம் சூடினார். தொடர்ந்து 1997ல் டயானா ஹெய்டன், 1999ஆம் ஆண்டில் யுக்தா முகி, 2000ஆவது ஆண்டில் பிரியங்கா சோப்ரா, 2017ஆம் ஆண்டு மனுஷி சில்லர் ஆகியோர் உலக அழகியாக வாகை சூடியவர்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.