காசிரங்கா தேசிய பூங்காவில் வெள்ளம்: 4 மான்கள் பலி!
காசிரங்கா தேசிய பூங்காவில் வெள்ளத்தில் மூழ்கி 4 மான்கள் பலியாகின.
அஸ்ஸாமின் காசிரங்கா தேசிய பூங்காவின் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு 4 மான்கள் பரிதாபமாக பலியாகின. மேலும், 24 விலங்குகள் வெள்ள நீரில் இருந்து மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வனத்துறை அதிகாரிகள் மான்கள் மற்றும் மற்ற விலங்குகளை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “கிழக்கு அஸ்ஸாமில் மொத்தமுள்ள 233 முகாம்களில், 167 முகாம்கள் மழை வெள்ளத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியாளர்கள் உள்பட வனத்துறை அதிகாரிகள் வனவிலங்குகள் மற்றும் தாவரங்களை மீட்பதற்காக பூங்காவுக்குள் உள்ள முகாம்களில் தங்கி ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு பிரிவுகளில் இதுவரை 8 முகாம்கள் காலி செய்யப்பட்டுள்ளன” என்றனர்.
அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பூங்காவின் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதற்கிடையில், கோலாகாட் மாவட்ட நிர்வாகம் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் பிரிவு 163 இன் கீழ் தேசிய பூங்கா வழியாக மணிக்கு 20 முதல் 40 கிமீ வேகத்தில், வாகனங்கள் செல்ல தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
உலகப் பாரம்பரிய தளமான காசிரங்கா தேசிய பூங்கா ஒற்றைக் கொம்புடைய காண்டாமிருகங்களுக்கு மிகவும் பிரபலமானது.
காசிரங்காவின் நில அமைப்பு அடர்ந்த வனப்பகுதிகளையும், உயரமான புல் வகைகளையும், சணல் தாவரங்கள், சதுப்பு நிலம் மற்றும் ஆழமற்ற குழங்களையும் உடையது.
1974 ஆம் ஆண்டு இந்தப் பூங்கா தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.