முகப்பு
இந்தியா

உங்கள் வாழ்க்கையை விரும்பினால், பைக் டாக்ஸியை பயன்படுத்த வேண்டாம்: பாதிக்கப்பட்ட பெண்!

பைக் டாக்ஸி டிரைவர் ஏற்படுத்திய விபத்தில் பாதிக்கப்பட்ட பெண் எக்ஸ் பதிவு

Updated On : 2 ஜூலை 2024, 1:43 pm IST
- dot com
பகிர்:

கர்நாடகத்தில் பைக் டாக்ஸியில் பயணம் செய்த பெண் ஒருவர் பயணத்தின்போது ஏற்பட்ட விபத்தினால், பைக் டாக்ஸியை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுரையுடன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கர்நாடகத்தின் பெங்களூருவில் கூகுள் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரியும் அமிஷா அகர்வால் என்ற பெண், கடந்த வாரம் பைக் டாக்ஸி ஒன்றில் பயணம் செய்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தினால் காயமடைந்த அமிஷா, விபத்து குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் அமிஷா தெரிவித்திருப்பதாவது, ``கடந்த ஜூன் 28ஆம் தேதியில் வெளியில் செல்வதற்காக பைக் டாக்ஸியில் முன்பதிவு செய்திருந்தேன். பின்னர், நான் முன்பதிவு செய்யப்பட்ட பைக்கில் பயணித்தேன். அந்த பயணத்தின் போது, டிரைவர் போக்குவரத்து விதிகளை மதிக்காமல், விதிகளை மீறியபடியே வாகனத்தை ஓட்டிச் சென்றார்.

Advertisement

ஒருசமயத்தில் கடுபீசனஹள்ளி சாலையருகே சென்றபோது, அவர் இண்டிகேட்டரைப் பயன்படுத்தாமல் வாகனத்தைத் திருப்பினார். இதனையடுத்து, எங்கள் பின்னால் வந்து கொண்டிருந்த காரில் வந்த ஒருவர் எதிர்பாராதவிதமாக நாங்கள் சென்ற பைக்கை மோதிவிட்டார்.

கார் மோதியதில் பைக் நிலைதடுமாறி, நானும் பைக் டிரைவரும் கீழே விழுந்தோம். ஆனால், பைக் டாக்ஸி டிரைவர் விரைவாக அவருடைய பைக்கை எடுத்துச் சென்று ஓடிவிட்டார். எங்களை மோதிய அந்த காரில் வந்தவர் தான் என்னை மருத்துவமனையில் அனுமதித்தார்.

இந்த சம்பவம் குறித்து அந்த பைக் டாக்ஸியின் வாடிக்கையாளர் சேவையை தொடர்புகொண்ட போது, காப்பீட்டு உரிமைக்காக மனு அளிக்குமாறு அறிவுறுத்தினர். இனி யாரும் ஒருபோதும் பைக் டாக்ஸியை பயன்படுத்த வேண்டாம். நீங்கள் உங்கள் வாழ்க்கையை விரும்புகிறீர்கள் என்றால் இதுபோன்ற பைக் டாக்ஸியை பயன்படுத்தாதீர்கள்” என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.