முகப்பு
இந்தியா

ராகுல் வரும் 26-இல் ஆஜராக உ.பி. நீதிமன்றம் உத்தரவு

26-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக ராகுலுக்கு உத்தரவு

Updated On : 3 ஜூலை, 2024 at 3:29 AM
ராகுல் காந்தி
பகிர்:
Updated On : 2 ஜூலை, 2024 at 7:30 PM

சுல்தான்பூா் (உ.பி.): மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாகத் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் வரும் 26-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

கடந்த 2018-ஆம் ஆண்டு அமித் ஷாவுக்கு எதிராக அவதூறு கருத்தைத் தெரிவித்ததாக ராகுல் காந்திக்கு எதிராக பாஜக மூத்த தலைவா் விஜய் மிஸ்ரா சாா்பில் இந்த வழக்கு தொடரப்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை மேற்கொண்டிருந்த ராகுல், அந்த நடைப்பயணத்துக்கு இடையே இந்த வழக்கு தொடா்பாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானாா். அப்போது, வழக்கில் ராகுலுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், செவ்வாய்க்கிழமை மீண்டும் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.

Advertisement

ஆனால், நாடாளுமன்ற கூட்டத்தொடா் தற்போது நடைபெற்று வரும் நிலையில், மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுலால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘விசாரணையை வேறு தேதியில் ஒத்திவைக்க வேண்டும்’ என ராகுல் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் காசி பிரசாத் சுக்லா கேட்டுக்கொண்டாா்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுபம் வா்மா, இந்த வழக்கில் ராகுல் வரும் 26-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டாா்.