15 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பெண்...கழிவுநீர் தொட்டியில் உடலின் மிச்சங்கள்!
15 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பெண்ணின் உடலின் மிச்சங்கள் கழிவுநீர் தொட்டியில் இருந்து மீட்பு.
கேரளத்தின் மன்னார் மாவட்டத்தில் உள்ள எரமாத்தூரில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன பெண்ணின் உடல் பாகங்கள் அவரது கணவரின் வீட்டு கழிவுநீர் தொட்டியில் இருந்து போலீஸார் மீட்டுள்ளனர்.
கலா என்பவரை அவரது கணவர் உள்பட 6 உறவினர்கள் சேர்ந்து கொலை செய்துள்ளனர். இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் இந்தக் கொலை வழக்கை விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட காவல்துறைத் தலைவர் சைத்ரா தெரசா ஜான் கூறுகையில், “சில மாதங்களுக்கு முன்பு அம்பலப்புழா காவல்துறைக்கு ஒரு பெயரில்லாத கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் கலாவை அவரது கணவர் மற்றும் உறவினர்கள் கழுத்தை நெரித்து கொன்று, உடலை வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டியில் புதைத்ததாக கூறப்பட்டிருந்தது. அதனடிப்படையில் நாங்கள் ஒரு ரகசிய விசாரணையைத் தொடங்கினோம். சில தடயங்கள் கிடைத்தன.
பின்னர், நாங்கள் ஐந்து பேரை காவலில் எடுத்து விசாரித்தோம். அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். கலாவின் உடல் செப்டிக் டேங்கில் வீசியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
தோண்டியெடுக்கப்பட்ட உடல் உறுப்புகள் தடயவியல் பரிசோதனை, மரபணு சோதனைக்கு அனுப்பப்படும், அதன் பிறகே அவை கலாவுடையதா என்பதை அறிய முடியும்.
கட்டட வேலைகள் செய்துவந்த அனிலும், கலாவும் காதலித்து, குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
திருமணத்துக்குப் பிறகு அனிலின் உறவினர் வீட்டில் அவர்கள் இருவரும் தங்கினர். ஒரு வருடம் கழித்து, அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், அனில் தனது வேலைக்காக அங்கோலாவுக்குச் சென்றார்.
ஒரு இளைஞருடன் கலாவுக்கு தொடர்பு இருப்பதாக உறவினர்கள் கூறியதையடுத்து அனில் இந்தியா வந்துள்ளார். பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையை தீர்த்து வைப்பதாகக் கூறி, அவளை குட்டநாட்டுக்கு அழைத்துச் சென்று, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கலாவை கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர்” என்றார்.
அதன் பிறகு கலா தனது மகனை கைவிட்டு, அவரது கள்ளக்காதலுடன் சென்றுவிட்டதாக கட்டுக்கதையை பரப்பியுள்ளார் அனில். கலாவின் உறவினர்களும் இந்தக் கதையை உண்மையென நம்பியுள்ளனர். கலாவின் சகோதரர், கலா காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். கலாவை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினரும் திணறி வந்தனர்.
கொஞ்ச நாள்களுக்கு பின்னர் அனில் வேரொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். சில நாள்களுக்கு முன்னர் தனது வீட்டை புனரமைத்த அனில், வீட்டிலிருந்த கழிவுநீர் தொட்டியை இடித்து கட்டாமல் அப்படியே விட்டுவிட்டார். பெயரில்லமால் வந்த கடிதத்தின் பேரில் கழிவுநீர் தொட்டியை ஆய்வு செய்து 5 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனிலின் உறவினர்கள் சோமன், சுரேஷ், பிரமோத், சந்தோஷ், ஜினு ராஜன் ஆகியோர் போலீஸாரின் காவலில் உள்ளனர். இஸ்ரேலில் உள்ள அனிலை இந்தியாவுக்கு அழைத்துவரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.