கதுவாவைத் தொடர்ந்து உத்தம்பூர் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல்!
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உத்தம்பூர் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உத்தம்பூர் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சாங் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த இந்த தாக்குதலுக்கு பாதுகாப்புப் படை வீரர்கள் பதிலடி கொடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்மு - காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள், வீரமரணம் அடைந்தனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்புப் படையினர் தரப்பிலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்புப் படை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தி வந்தபோது, இன்றும் பயங்கரவாதிகள் மறைந்திருந்து, பாதுகாப்புப் படையினர் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் சிலர் படுகாயம் அடைந்தனர்.
Advertisement
உடனடியாக சுதாரித்துக்கொண்ட வீரர்கள், பயங்கரவாதிகள் மறைந்திருந்த இடத்தை நோக்கி சுமார் 2 மணிநேரம் தொடர்ந்து துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இதில் பயங்கரவாதிகள் ஆயுதங்களை விட்டு தப்பிச்சென்றனர்.
இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரின் உத்தம்பூர் மாவட்டத்திலும் இன்று இரவு 8 மணியளவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். உத்தம்பூர் பகுதியிலிருந்து 164 கிலோ மீட்டர் தூரத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சாங் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இத்தாக்குதல் நடந்தது.
பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளதாகவும், அங்கு பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்து வருவதாகவும் அதிகார்கள் தெரிவித்தனர்.
கடந்த ஒரு மாதத்தில் ஜம்மு-காஷ்மீரில் நடத்தப்பட்ட ஆறாவது பயங்கரவாத தாக்குதல் இதுவாகும்.