முகப்பு
இந்தியா

உன்னாவ் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நிதியுதவி!

உன்னாவ்வில் ஏற்பட்ட கோர விபத்தில் 19 பேர் பலியாகியுள்ளனர்.

Updated On : 10 ஜூலை, 2024 at 6:21 AM
உன்னாவ் விபத்து
பகிர்:

உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.

ஆக்ரா - லக்னெள அதிவிரைவுச் சாலையில் உன்னாவ் மாவட்டம் பெஹ்தா முஜாவர் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில், பிகார் மாநிலம் மோதிஹாரி மாவட்டத்தில் இருந்து தில்லி நோக்கி சென்றுக்கொண்டிருந்த டபுள் டெக்கர் சொகுசுப் பேருந்து, பால் லாரி மீது அதிவேகமாக மோதியதில் சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர், லாரி ஓட்டுநர் உள்பட 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும், 19 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இரங்கல் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவில் நடந்த சாலை விபத்து மிகவும் வருத்தத்தை அளிப்பதாகவும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடவுள் அவர்களுக்கு வலிமையை தரட்டும் என்று ராஜ்நாத் சிங் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →