ரஷிய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ள இந்திய குடிமக்கள் அனைவரையும் விரைவாக விடுவிக்க அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் உறுதி அளித்துள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் வினய் மோகன் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ரஷியா இடையேயான 22வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷியா சென்றிருந்த பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் புதினுடன் இருநாட்டு உறவு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது, உக்ரைனுடனான போரில் ரஷிய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ள இந்தியர்களை உடனடியாக விடுவிக்க மோடி வலியுறுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ரஷிய ராணுவத்தில் உள்ள அனைத்து இந்தியர்களும் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள் என்று புதின் உறுதியளித்துள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் செய்தியாளர்கள் சந்திப்பில் செவ்வாய்க்கிழமை இரவு தெரிவித்தார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், உக்ரைன் மீதான போர் தொடங்கியதைத் தொடர்ந்து, ரஷிய ராணுவத்தில் அந்நாட்டிலுள்ள இந்தியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். போர் நடைபெறும் பகுதிகளில் ரஷிய ராணுவத்துக்கு உதவியாளர்களாக சுமார் 200 இந்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ரஷியாவிலுள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்தும் அவர்களை அந்நாட்டின் ராணுவத்திலிருந்து விடுவிப்பது தொடர்பாகவும், ரஷியாவிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
உக்ரைனுடனான போரில் ரஷிய ராணுவத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இந்தியர்களில் இதுவரை நால்வர் கொல்லப்பட்டிருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் கடந்த மாதம் பதிவிட்டிருந்தது. மேலும், இந்தியர்களை அந்நாட்டின் ராணுவத்தில் பணியமர்த்தக் கூடாதென்பதையும் வலியுறுத்தியிருந்தது.
இதுவரை ரஷிய ராணுவத்தில் பணியாற்றும் 10 இந்தியர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் மீதமுள்ள அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.