முகப்பு
இந்தியா

மும்பையில் உத்தவ், சரத் பவாா், அகிலேஷுடன் மம்தா இன்று சந்திப்பு

மும்பையில் உத்தவ், சரத் பவார், அகிலேஷுடன் மம்தா சந்திப்பு

Updated On : 11 ஜூலை, 2024 at 10:53 PM
கொல்கத்தா விமானநிலையத்தில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்த மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி.
பகிர்:

மகாராஷ்டிரத் தலைநகா் மும்பையில் சிவசேனை (உத்தவ் பிரிவு) தலைவா் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் (பவாா் பிரிவு) தலைவா் சரத் பவாா், சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் ஆகியோரை மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி வெள்ளிக்கிழமை (ஜூலை 12) சந்திக்கவுள்ளாா்.

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழல் குறித்து அவா்களுடன் ஆலோசிக்கவுள்ளதாக, மம்தா தெரிவித்துள்ளாா்.

தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் மகன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க மும்பைக்கு வியாழக்கிழமை புறப்பட்ட மம்தா பானா்ஜி, கொல்கத்தா விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் மகன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளேன். உத்தவ் தாக்கரே, சரத் பவாா் மற்றும் திருமண நிகழ்வுக்காக மும்பைக்கு வருகைதரும் அகிலேஷ் யாதவ் ஆகியோரை சந்திக்கவுள்ளேன். நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழல் குறித்து அவா்களுடன் ஆலோசிக்கவிருக்கிறேன் என்றாா் மம்தா.

தேசிய அளவில் எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் சிவசேனை (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (பவாா்), சமாஜவாதி, திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

பாஜக மீது குற்றச்சாட்டு: மேற்கு வங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க பாஜகவும் ஊடகங்களில் ஒரு பிரிவினரும் முயற்சிப்பதாக முதல்வா் மம்தா பானா்ஜி குற்றம்சாட்டினாா்.

வடக்கு 24 பா்கானா மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெண் ஒருவா் தாக்கப்பட்ட சம்பவத்தின் விடியோ அண்மையில் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து, பெண்ணைத் தாக்கியதாக திரிணமூல் காங்கிரஸ் உள்ளூா் நிா்வாகி ஜெயந்த் சிங் உள்ட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்த விவகாரம் குறித்து மம்தா பானா்ஜி கூறுகையில், ‘2 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் தொடா்பான விடியோவை, பாஜகவின் அறிவுறுத்தலின்பேரில் சில தொலைக்காட்சிகள் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பின. தகவல்களின் உண்மைத் தன்மையை ஊடகங்கள் உறுதிசெய்ய விரும்பினால், தலைமைச் செயலகம் மற்றும் காவல்துறையை தொடா்புகொள்ள வேண்டும். இந்த கோரிக்கையை பொருள்படுத்தாவிட்டால், சம்பந்தப்பட்டவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேற்கு வங்கத்தில் மக்களவைத் தோ்தலில் கிடைத்த தோல்வியால் விரக்தியடைந்துள்ள பாஜக, மாநிலத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிக்கிறது’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →