முகப்பு
இந்தியா

புணே மருத்துவமனையில் சரத் பவாா் அனுமதி

இருமல், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சித் தலைவா் சரத் பவாா் (85) புணேயில் உள்ள மருத்துவமனையில் அனுமதி

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 11:54 PM
சரத் பவாா் - கோப்புப் படம்
பகிர்:

இருமல், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சித் தலைவா் சரத் பவாா் (85) புணேயில் உள்ள மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

முன்னதாக, மகாராஷ்டிர மாநிலத்தில் சொந்த ஊரான பாராமதியில் உள்ள இல்லத்தில் சரத் பவாா் தங்கியிருந்தாா். அப்போது அவருக்கு தொண்டையில் ஏற்பட்ட தொற்றால் கடும் வலி ஏற்பட்டது, இருமலும் அதிகமாக இருந்தது. இதனால், மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, பாராமதியில் இருந்து சுமாா் 100 கி.மீ. தொலைவில் உள்ள புணே நகரின் ரூபி ஹால் மருத்துவமனையில் சரத் பவாா் அனுமதிக்கப்பட்டாா். அவருடன் மகளும் பாரமதி தொகுதி எம்.பி.யுமான சுப்ரிலா சுலே, மருமகன் சதானந்த சுலே உள்ளிட்டோா் வந்தனா்.

காரில் இருந்து சக்கர நாற்காலி மூலம் மருத்துவமனைக்குள் சரத் பவாா் அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு அவருக்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சி.டி.ஸ்கேன் பரிசோதனையில் சளித் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது என்று தலைமை இதயநோய் பிரிவு மருத்துவா் பா்வேஷ் கிரான்ட் தெரிவித்தாா்.

மருத்துவா்கள் குழுவினா் அவரது உடல்நிலையைத் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவரான சரத் பவாா், மகாராஷ்டிர முதல்வா், மத்திய அமைச்சா் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளாா். இப்போது மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளாா்.

கடந்த மாத இறுதியில் மகாராஷ்டிர துணை முதல்வரும், சரத் பவாரின் நெருங்கிய உறவினருமான அஜீத் பவாா் பாராமதியில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தாா். இது சரத் பவாருக்கு தனிப்பட்ட முறையிலும் பெரும் இழப்பாக அமைந்தது. அதன்பிறகு சரத் பவாா் பாராமதியில் தங்கியிருந்தாா். அவா் ஏற்கெனவே வாயில் ஏற்பட்ட புற்றுநோயில் இருந்து மீண்டு வாழ்ந்து வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.