3-வது கூட்டணியில் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம்... மும்முனைப் போட்டிக்குத் தயாராகும் மேற்கு வங்கம்!
திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஹூமாயூனின் கட்சியுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்கவுள்ளதாக ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் ஓவைசி தெரிவித்துள்ளதைப் பற்றி...
திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஹூமாயூனின் கட்சியுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்கவுள்ளதாக ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசம், தமிழ்நாடு, கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான தேர்தல் கடந்த மார்ச் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
மொத்தமாக 294 தொகுதிகளைக் கொண்டுள்ள மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாக ஏப்.23 மற்றும் ஏப். 29 ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தலைமையும் பாஜக தலைமையிலான கூட்டணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.
Advertisement
கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மமதாவை நீக்கிவிட்டு புதியதாக ஆட்சியை அமைக்க பாஜக மிகத் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. அதேவேளையில், பாஜகவுக்கு எதிராக இருக்கும் சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற திரிணமூல் காங்கிரஸ் கட்சி தீவிரமாக செலாற்றி வருகிறது.
இந்த நிலையில், முஸ்லீம் ஆதரவு வாக்குகளை அறுவடை செய்யும் விதமாக, அகில இந்திய மஜ்லீஸ் இத்தெஹதுல் முஸ்லீமின் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி புதிய கூட்டணி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகிய மூத்த தலைவர் ஹூமாயூன் கபிர் தொடங்கியுள்ள புதிய கட்சியான ஆம் ஜனதா உன்னயான் கட்சியுடன் சேர்ந்து 294 தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி போட்டியிடவுள்ளதாக ஓவைசி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தைச் சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏவான ஹூமாயூன் கபிர், கடந்தாண்டு மேற்கு வங்கத்தில் பாபர் மசூதி கட்டப்போவதாக சர்ச்சையை எழுப்பியதைத் தொடர்ந்து கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
அதன்பின்னர், புதியதாக ஆம் ஜனதா உன்னயான் கட்சியைத் தொடங்கினார். மேலும், அவரது கட்சி 183 இடங்களில் போட்டியிடும் எனக் கூறி 15 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டிருந்தார்.
திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜிக்கு எதிராக வங்கத்தைச் சேராத முஸ்லீம் வேட்பாளரான பூனம் பேகத்தைக் களமிறக்கியுள்ளார் ஹூமாயூன் கபீர். இந்த நடவடிக்கை திரிணாமூல் காங்கிரஸின் சிறுபான்மை வாக்கு வங்கியை பலவீனப்படுத்தும் என்றும் அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். பிளவுபட்ட மக்களின் முடிவுக்கிணங்க தங்கள் கூட்டணிக்கு மேற்கு வங்கத் தேர்தலில் வெற்றி கிடைத்தால், மேற்கு வங்கத்தில் முதல் முஸ்லீம் முதல்வர் பதவியேற்பார் என்றும் தெரிவித்துள்ளார் கபீர்.