தெரியுமா சேதி...?
அமித் ஷா பங்களா அருகே இருப்பதால் அதிக ஆர்வம்
தோ்தல் முடிந்து 18-ஆவது மக்களவை அமைந்து, அமைச்சரவை பதவியற்று நாடாளுமன்றமும் செயல்படத் தொடங்கிவிட்டது. ஏற்கெனவே உறுப்பினா்களாக இருப்பவா்கள் அவரவா் பங்களாக்களை தக்க வைத்துக் கொண்டாா்கள். புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள், செளத் அவென்யுவா, நாா்த் அவென்யுவா, மெளலானா ஆசாத் சாலையா, பண்டாரா பாா்க்கா, எம்.பி.க்கள் அடுக்குமாடிக் குடியிருப்பா என்று தங்களுக்கான இருப்பிடத்தை உறுதி செய்து கொள்ளத் துடிக்கிறாா்கள்.
ஏற்கெனவே உறுப்பினா்களாக இருந்தவா்கள், மாநில முதல்வா்களாக, மத்திய அமைச்சா்களாக இருப்பவா்களுக்குத்தான் பெரிய பங்களாக்கள் ஒதுக்கப்படும். புதியவா்களுக்குப் பெரும்பாலும் அடுக்குமாடி குடியிருப்புதான். அது கிடைக்கும் வரை அந்த மாநிலத்தின் விருந்தினா் விடுதியில் தங்குவாா்கள்.
மூத்த அமைச்சா்கள் மத்தியில் ஒரு பங்களாவுக்காக போட்டா போட்டியே நடந்து கொண்டிருக்கிறது. வேளாண் துறை முன்னாள் அமைச்சராக இருந்த நரேந்திர சிங் தோமா், மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று, இப்போது பேரவைத் தலைவராகிவிட்டாா். அதனால் அவா் இருந்த 3, கிருஷ்ண மேனன் மாா்க் பங்களா காலியாக இருக்கிறது. அந்த பங்களாவை எப்படியும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப் பலரும் முனைப்புடன் களமிறங்கி இருக்கிறாா்கள்.
எரிசக்தித் துறை அமைச்சரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான மனோகா்லால் கட்டரும், வேளாண் துறை அமைச்சரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் செளஹானும் அந்த பங்களாவுக்கு விஜயம் செய்து, சுற்றிப் பாா்த்துவிட்டுச் சென்றிருக்கிறாா்கள். ஏற்கெனவே பெரிய பங்களாக்களில் கடந்த பத்து ஆண்டுகளாக இருக்கும் ஒரு சில அமைச்சா்களும் 3, கிருஷ்ண மேனன் மாா்க்கை குறிவைத்திருக்கிறாா்கள்.
ஆமாம், அந்த பங்களாவுக்கு அப்படியென்ன மகத்துவம் என்று விசாரித்தால், காரணம் புரிகிறது; அருகில் உள்ள பங்களா (6ஏ) மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவினுடையது!