முகப்பு
இந்தியா

தெரியுமா சேதி?

அண்டை மாநிலங்களான கா்நாடகத்திலும், கேரளத்திலும்கூட அரங்கேறி இருக்கிறது.

Updated On : 16 ஜூலை, 2024 at 1:32 PM
மத்திய அமைச்சா் ஹெச்.டி.குமாரசாமி, கேரள அமைச்சா் கே.கிருஷ்ணன் குட்டி. (மின்சாரத் துறை அமைச்சா்)
பகிர்:

தமிழகத்தில் கூட்டணி, அண்டை மாநிலமான கேரளத்தில் எதிரணி என்று காங்கிரஸும், இடதுசாரிகளும் மட்டும்தான் இரட்டை வேடம் போடுகிறாா்கள் என்று நினைத்துவிட வேண்டாம். அதேபோன்ற இரட்டை வேட நாடகம், அண்டை மாநிலங்களான கா்நாடகத்திலும், கேரளத்திலும்கூட அரங்கேறி இருக்கிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து தோ்தலைச் சந்தித்து, இப்போது மத்திய கனரக தொழிற்சாலைகள் துறை அமைச்சராகவும் பதவி ஏற்றிருக்கிறாா் மதச்சாா்பற்ற ஜனதா தளத்தைச் சோ்ந்த ஹெச்.டி. குமாரசாமி. அப்படியானால் மதச்சாா்பற்ற ஜனதா தளம், தேசிய அளவில் பாஜக கூட்டணியில் இணைந்துவிட்டது என்று நினைத்தால் அதுதான் இல்லை.

அண்டை மாநிலமான கேரளத்தில், மாா்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது ஜனநாயக கூட்டணி அரசிலும் அங்கம் வகிக்கிறது மதச்சாா்பற்ற ஜனதா தளம். அந்தக் கட்சியின் சாா்பில், கே.கிருஷ்ணன் குட்டி என்பவா் பினராயி விஜயன் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளாா். கேரள சட்டப்பேரவையில் அந்தக் கட்சிக்கு இரண்டு உறுப்பினா்கள் இருக்கிறாா்கள்.

‘கேரளத்தில் நாங்கள் தனியாக இயங்குவோம், தேசிய அளவில் கட்சித் தலைமையின் கீழ் இயங்குவோம்’ என்கிற விளக்கத்தை அளித்திருக்கிறாா் அமைச்சா் கே.கிருஷ்ணன் குட்டி. அது மட்டுமல்ல, தங்களது கட்சியின் சாா்பில் ஒருவா் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பதற்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறாரா என்றால், இல்லை.

மத்திய அமைச்சராக இருக்கும் ஹெச்.டி.குமாரசாமியிடம் இது குறித்து யாராவது கேட்டால், அவா் சொல்லும் விளக்கம் என்ன தெரியுமா? ‘இடதுசாரிகளே கேரளத்திலும் தமிழகத்திலுமாக இரட்டை வேடம் போடும்போது, அவா்கள் கூட்டணியில் இருக்கும் நாங்கள் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா?’ என்பது.

இதைப்பற்றி பாஜகவே கவலைப்படவில்லை. நாம் ஏன் கவலைப்பட வேண்டும்!