முன்னாள் ராணுவ வீரரிடம் அத்துமீறிய ஆளுநரின் மகன்: காலணியை கொடுத்து..
காலணியை கொடுத்து நாக்கால் சுத்தம் செய்ய சொன்ன ஆளுநரின் மகன்
ஒடிசா ஆளுநரின் மகன் தாக்கியதாக முன்னாள் வீரர் புகார் அளித்துள்ளார்.
ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸின் மகன் லலித் குமார், கடந்த வாரம் ஜூலை 7ஆம் தேதி இரவில், ரயில் நிலையத்திலிருந்து ஆளுநர் மாளிகைக்கு செல்வதற்காக, கார் அனுப்பிவைக்கச் சொல்லியுள்ளார். ஆளுநர் மாளிகையில் காவலராக பணிபுரியும் முன்னாள் ராணுவ வீரரான பைகுந்த்நாத் பிரதான், ஆளுநர் மகனுக்காக கார் அனுப்பியுள்ளார்.
ஆளுநர் மாளிகை வந்தடைந்த லலித் குமார், அவருடைய அறைக்கு பிரதானை, அன்றிரவு 11.45 மணியளவில் வரவழைத்திருக்கிறார். தன்னை அழைப்பதற்கு சொகுசு காரை அனுப்பாமல், சாதாரண காரை அனுப்பியதாகக் கூறி, பிரதானை லலித் குமாரும் அவரது நண்பர்களும் தாக்கியுள்ளனர். அதுமட்டுமின்றி, லலித்தின் செருப்பை நாக்கால் சுத்தம் செய்யுமாறும் வற்புறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து, பிரதான் ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார்; ஆனால், அவர் கண்டுகொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து, காவல்துறையிடம் புகார் அளித்தபோதும், அவர்களும் வழக்குப்பதிவு செய்யாமல், உயர் அதிகாரிகளிடம் ஆலோசித்த பிறகு, நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளனர்.
இந்நிலையில் பிரதானின் மனைவி செய்தி நிறுவனங்களிடம், இந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, ``பிரதான் மற்றும் அவரது குடும்பத்தினர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்திற்குப் பிறகு மிகவும் அச்சத்தில் உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.