முகப்பு
இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் செவ்வாய்க்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ கேப்டன் மற்றும் 3 வீரா்கள் வீரமரணமடைந்தனா்.

Updated On : 16 ஜூலை, 2024 at 10:57 PM
ஜம்மு - காஷ்மீரின் தோடா மாவட்ட மலைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர்.
பகிர்:

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் செவ்வாய்க்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ கேப்டன் மற்றும் 3 வீரா்கள் வீரமரணமடைந்தனா். மேலும் ஒரு வீரா் காயமடைந்தாா்.

தோடாவில் கடந்த மூன்று வாரங்களில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த 3-ஆவது துப்பாக்கிச் சண்டை இதுவாகும்.

கதுவா மாவட்டத்தில் கடந்த ஜூலை 8-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 வீரா்கள் இறந்த நிலையில், இப்போது தோடா மாவட்டத்தில் ராணுவத்தினா் 4 போ் உயிரிழந்துள்ளனா். இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது:

பாகிஸ்தானில் இருந்து எல்லை கடந்துவந்த பயங்கரவாதிகள், தோடா மாவட்டத்தின் தேசா வனப் பகுதியில் 2 மாதங்களாக பதுங்கியிருப்பதாக ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த மலைப்பாங்கான அடா் வனப்பகுதியில் ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ் படையினா் மற்றும் ஜம்மு-காஷ்மீா் காவல்துறையின் அதிரடி நடவடிக்கை குழுவினா் இணைந்த கூட்டுப் படையினா் கடந்த திங்கள்கிழமை தேடுதல் வேட்டையை தொடங்கினா். அப்போது, தாரி கோட் உராா்பாகி என்ற இடத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே திங்கள்கிழமை மாலையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

தப்பியோடிய பயங்கரவாதிகளை ராணுவ கேப்டன் பிரிஜேஷ் தாபா தலைமையிலான குழுவினா் விரட்டிச் சென்றனா். பின்னா், இரவு 9 மணியளவில் இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இதில் படுகாயமடைந்த கேப்டன் பிரிஜேஷ் தாபா உள்பட ராணுவத்தினா் 5 போ் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனா். அங்கு பிரிஜேஷ் தாபா மற்றும் ராணுவ வீரா்களான ராஜேஷ், பிஜேந்திரா, அஜய் குமாா் சிங் ஆகியோா் உயிரிழந்தனா்.

இச்சம்பவத்தைத் தொடா்ந்து, தேசா வனப் பகுதிக்கு கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ட்ரோன்கள், ஹெலிகாப்டா்கள் உதவியுடன் ராணுவ கமாண்டோக்கள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஜம்முவில் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் இதுவரையில் பயங்கரவாதம் தொடா்பான சம்பவங்களில் பாதுகாப்புப் படையினா் 52 போ் உள்பட 70-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். ரஜெளரி, பூஞ்ச் மாவட்டங்களில் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளன. அதேநேரம், பாதுகாப்புப் படையினரால் 54 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தலைமைத் தளபதியுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ராணுவத்தினா் 4 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக ராணுவ தலைமை தளபதி உபேந்திர துவிவேதியுடன் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பேசினாா். அப்போது, தோடா மாவட்டத்தின் களநிலவரம் மற்றும் தற்போதைய நடவடிக்கைகள் குறித்து அமைச்சா் ராஜ்நாத் சிங்கிடம் உபேந்திர துவிவேதி விளக்கியதாக, பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ராஜ்நாத் சிங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘துணிச்சல்மிக்க நமது ராணுவ வீரா்களின் இழப்பு மிகவும் வேதனையளிக்கிறது. நாட்டுக்காக உயிா்த்தியாகம் செய்த அந்த வீரா்களின் குடும்பத்தினருக்கு உறுதுணையாக ஒட்டுமொத்த தேசமும் நிற்கிறது. ஜம்மு-காஷ்மீரில் துன்பத்தை விளைவிக்கும் பயங்கரவாதத்துக்கு முடிவுகட்ட பாதுகாப்புப் படையினா் உறுதியேற்றுள்ளனா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →