முகப்பு
இந்தியா

பெண்கள் ஆடைகளைக் கழற்றி நூதனப் போராட்டம்!

பழங்குடி இனத்தவரின் உயிரிழப்பில் சந்தேகமிருப்பதாகக் கூறி உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகை

Updated On : 16 ஜூலை, 2024 at 12:28 PM
கோப்புப் படம்
பகிர்:

மத்தியப் பிரதேசத்தில் பழங்குடி இனத்தவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தின் குணாவில் பழங்குடி இனத்தவரான தேவா பர்தி என்பவர், தனது திருமணத்திற்கு சிலமணி நேரங்களுக்கு முன்பு திருட்டு வழக்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் (ஜூலை 14) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட தேவா காவல்நிலையத்தில் காவலில் இருந்தபோது மாரடைப்பால் அன்றிரவே இறந்து விட்டார் என்று தேவாவின் குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தேவாவின் இறப்பு குறித்து தகவல் அறிந்த மணப்பெண்ணும், பெண்ணின் தந்தையும் தீக்குளிக்க முயன்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, தேவாவின் உயிரிழப்பில் சந்தேகமிருப்பதாகக் கூறி, அவரது உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு கலவரம் செய்ய முயன்றுள்ளனர். ``சிறுவயது இளைஞனுக்கு எப்படி மாரடைப்பு ஏற்படும்? காவல்துறையினர் தான் தேவாவை அடித்துக் கொன்றுள்ளனர்” என்று கூறி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, போராட்டம் செய்தவர்களில் இரண்டு பெண்கள் அவர்களுடைய ஆடைகளைக் கழற்றி, நூதனமாகப் போராடியும் சிலர் தரையில் படுத்தும் போராடியுள்ளனர். இதனையடுத்து, போராட்டம் செய்தவர்களை காவல்துறையினர் கலைக்க முயன்றபோது ஏற்பட்ட கைகலப்பில் காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.

இறுதியாக, தேவாவின் உறவினர்களின் கோரிக்கை ஏற்ற காவல்துறையினர் தேவாவின் உடலை, போபால் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதித்துள்ளனர்.

மேலும், தேவா மீது ஏழு குற்ற வழக்குகள் இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.