வேட்டி அணிந்து வந்தால் அனுமதி இல்லை!
வணிக வளாகத்தில் வேட்டி அணிந்துசென்ற விவசாயிக்கு அனுமதி மறுப்பு
பெங்களூருவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வேட்டி அணிந்து சென்ற முதியவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெங்களூருவில் உள்ள ஜிடி வணிக வளாகத்தில் திரைப்படம் பார்ப்பதற்கு ஒரு இளைஞரும், அவரது தந்தையும் டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு நேற்று (ஜூலை 16) சென்றுள்ளனர். ஆனால் அந்த இளைஞரின் தந்தை வேட்டி அணிந்து சென்றதால், மாலின் பாதுகாப்புக் காவலர்கள் அவர்களுக்கு மாலினுள்ளே அனுமதி வழங்கவில்லை.
திரும்பிச் சென்று பேன்ட் அணிந்து வருமாறு வற்புறுத்தியுள்ளனர். வேட்டி அணிந்த யாருக்கும் இந்த வணிக வளாகத்தில் அனுமதி வழங்கப்படுவதில்லை என்று கூறி அனுமதி மறுத்துள்ளனர். ஆனால், அவர்களின் வீடு தொலைவில் இருந்ததால், அவர்களால் முடியாது என்று கூறி இளைஞர் மறுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சேஹ்சத் பூனவல்லா, கர்நாடகத்தில் ஆட்சி நடத்தும் காங்கிரஸை விமர்சித்துள்ளார்.
அவர் தெரிவித்ததாவது, ``கர்நாடக முதல்வர் வேட்டி அணிந்துள்ளார்; ஆனால், வேட்டி அணிந்த விவசாயி வணிக வளாகத்துக்குள் நுழைவதற்கு தடை. கர்நாடக காங்கிரஸ் அரசு இதை எப்படி அனுமதிக்கிறது?
முன்னர், டீசல் விலையை உயர்த்தி விவசாயிகளுக்கு துரோகம் இழைத்தனர். இப்போது வேட்டி அணிவதை மறுப்பதன் மூலம் விவசாயிகளை அவமதிக்கிறார்கள். வேட்டி நமது பெருமை! ராகுல் எங்கே இருக்கிறார்?” என்று கூறியுள்ளார்.
எக்ஸ் தளத்தில் பயனாளர் ஒருவர், ``வணிக வளாக நிர்வாகம் இந்த தவறை சரிசெய்து, பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக ஒரு வருடம் இலவசமாக திரைப்பட அனுமதி வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். இதுதவிர ஒரு சில இடங்களில், அந்த முதியவருக்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.
இருப்பினும், இந்த சம்பவம் குறித்து ஜிடி வணிக வளாக நிர்வாகம் இதுவரையில் எந்த பதிலும் அளிக்கவில்லை