முகப்பு
இந்தியா

அயன் பட பாணியில்.. உணவை மறுத்த ஏர் இந்தியா பயணி கைது!

அயன் பட பாணியில் விமான பயணத்தின்போது உணவை மறுத்த ஏர் இந்தியா பயணி கைது செய்யப்பட்டார்.

Updated On : 17 ஜூலை, 2024 at 11:04 AM
ஏர் இந்தியா - கோப்புப்படம்
பகிர்:

குடிநீர் மற்றும் உணவை தொடர்ந்து மறுத்துவந்த ஏர் இந்தியா பயணி, தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவர் ரூ.69 லட்சம் மதிப்பிலான தங்கத்தைக் கடத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஜெட்டாவிலிருந்து தில்லிக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் மிகவும் விநோதமாக, ஒரு பயணி, பணிப்பெண்கள் வழங்கிய எந்த உணவையோ அல்லது குடிநீரையோ கூட எடுத்துக்கொள்ளவில்லை.

முதலில், இது பணிப்பெண்களுக்கு பெரிதாக எதுவும் தோன்றவில்லை. பிறகுதான் ஐந்தரை மணி நேர பயணம் முழுக்க பயணி எதையும் சாப்பிடாதது, பணிப்பெண்களுக்கு விநோதமாக தெரிய, உடனடியாக அவர் விமானிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம் மூலம் தகவல் கொடுத்தார்.

விமானம் தில்லி வந்தடைந்ததும், பயணி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டார். அவர் விரைவாக வெளியே செல்ல முயன்றார். ஆனால் அவரை அதிகாரிகள் விசாரித்தபோது, அவர் வயிற்றில் ரூ.69 லட்சம் மதிப்புள்ள நான்கு முட்டை வடிவ தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

1096 கிராம் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பயணியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. பயணியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து, விமானத்தில் பயணிகள் உணவுப் பொருள்களை வேண்டாம் என்று மறுத்தால் தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, விமான நிலையத்தில் உள்ள ஒரு கடையில் நேற்று சோதனை செய்யப்பட்டது. சோதனைக்குப் பின், கடந்த 2 மாதங்களில் 267 கிலோ எடையுள்ள ரூ.167 கோடி மதிப்பிலான தங்கத்தைக் கடத்த உதவியதாக அந்தக் கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.