இரு சமூகத்தினரிடையே மோதல்: தலித் நபரின் கை துண்டிப்பு!
வாக்குவாதத்தால் தலித் சமூகத்தினரின் கையைத் துண்டித்த கும்பல்
கர்நாடகத்தில் சமூகத்தின் பேரைச் சொல்லி நடந்த வாக்குவாதத்தால், தலித் சமூகத்தினரின் கையைத் துண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகத்தின் மலகலு கிராமத்தைச் சேர்ந்தவர் அனிஷ் குமார். இவர், அப்பகுதியின் முன்னாள் ஜில்லா பஞ்சாயத்து தலைவர் மற்று காங்கிரஸ் தலைவரின் மகன் ஆவார்.
அனிஷும் அவரது உறவினரும் கடந்த ஜூலை 21ஆம் தேதியில் தெருவில் சென்று கொண்டிருந்தபோது, வோக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த சிலர், அனிஷையும் அவரது உறவினரையும் சமூகத்தின் பேரால் வம்பிழுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அனிஷுக்கும் அந்த கும்பலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, இறுதியில் தாக்குதலில் முடிவடைந்துள்ளது.
Advertisement
இதனையடுத்து ஹர்ஷா, கருணேசா, ராகுல், சிவா, சஷன்கா, சுப்பா மற்றும் தர்ஷன் ஆகிய ஏழு பேர் கொண்ட கும்பல், அனிஷின் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் அனிஷின் இடது கை துண்டிக்கப்பட்டதுடன், அனிஷின் குடும்பத்தினரும் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தினைத் தொடர்ந்து, அனிஷும் அவரது குடும்பத்தினரும் கனகபுரா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தாக்குதல் நடத்திய ஏழு பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மூன்று பேர் தேடப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.