குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள 'தர்பார் ஹால்' மற்றும் 'அசோக் ஹால்' ஆகியவற்றின் பெயர்களை மாற்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
குடியரசுத் தலைவர் மாளிகை, இந்திய குடியரசுத் தலைவரின் அலுவலகம், இல்லம் ஆகியவை நாட்டின் சின்னமாகவும் மக்களின் விலைமதிப்புமிக்க பாரம்பரிய சின்னமாகவும் இருக்கின்றன.
குடியரசுத் தலைவர் மாளிகையின் முக்கியமான இரண்டு அரங்குகளான 'தர்பார் ஹால்' மற்றும் 'அசோக் ஹால்' ஆகியவற்றை 'கணதந்திர மண்டபம்' மற்றும் 'அசோக் மண்டபம்' என பெயர் மாற்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முடிவு செய்துள்ளார்.
'தர்பார் ஹால்' என்பது தேசிய விருதுகள் வழங்குவது போன்ற முக்கியமான விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களின் இடமாகும். 'தர்பார்' என்ற சொல் இந்திய ஆட்சியாளர்கள், ஆங்கிலேயர்களின் நீதிமன்றங்கள், கூட்டங்களைக் குறிக்கிறது.
அதாவது 'கணதந்திரம்' என்ற சொல், பழங்காலத்திலிருந்தே இந்திய சமூகத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. கணதந்திரம் என்பது குடியரசு, மக்கள் ஆட்சி எனப் பொருள் தருகிறது. இந்த இடத்திற்கு இது மிகவும் பொருத்தமான பெயராக மாறியுள்ளது.
'அசோக் ஹால்' முதலில் ஒரு 'பால்ரூம்' எனப்படும் நடன மண்டபமாகும். 'அசோக்' என்ற வார்த்தை "எல்லா துன்பங்களிலிருந்தும் விடுபட்டவர்" அல்லது "எந்த துக்கமும் இல்லாதவர்" என்று பொருள்படும்.
மேலும், 'அசோகா' என்பது ஒற்றுமை, அமைதியான வாழ்வின் சின்னமான அசோக பேரரசரைக் குறிக்கிறது. இந்த வார்த்தை இந்திய மத மரபுகள், கலை மற்றும் கலாசாரத்தில் ஆழமான முக்கியத்துவத்தைக் கொண்ட அசோக மரத்தையும் குறிக்கிறது.
'அசோக் ஹால்' என்பதை 'அசோக் மண்டபம்' என மறுபெயரிடுவது மொழியில் சீரான தன்மையைக் கொண்டுவருகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று, குடியரசுத் தலைவர் மாளிகையின் முகலாய தோட்டம் 'அமிர்தி பூங்கா' எனப் பெயர் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.