‘க்யூட்’ இறுதி விடைக் குறிப்புகள் வெளியீடு: விரைவில் முடிவுகள் அறிவிக்கப்படும் - என்டிஏ
பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வுக்கான (க்யூட்) இறுதி விடை குறிப்புகளை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) வியாழக்கிழமை வெளியிட்டது.
இந்தியா‘க்யூட்’ இறுதி விடைக் குறிப்புகள் வெளியீடு: விரைவில் முடிவுகள் அறிவிக்கப்படும் - என்டிஏ
பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வுக்கான (க்யூட்) இறுதி விடை குறிப்புகளை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) வியாழக்கிழமை வெளியிட்டது.
புது தில்லி, ஜூலை 25: பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வுக்கான (க்யூட்) இறுதி விடை குறிப்புகளை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) வியாழக்கிழமை வெளியிட்டது. விரைவில் தோ்வு முடிவுகள் வெளியாகும் என்று என்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனா்.
மத்திய பல்கலைக்கழகங்கள் சாா்பில் வழங்கப்படும் இளநிலை கலை-அறிவியல் பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெற என்டிஏ சாா்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் ‘க்யூட்’ நடத்தப்படுகிறது. நிகழாண்டு க்யூட் தோ்வு கடந்த மே 15 முதல் 24-ஆம் தேதி வரை முதன் முறையாக நேரடி எழுத்துத் தோ்வு முறை மற்றும் கணினி அடிப்படையில் என இரண்டு முறைகளில் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 13 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் இத் தோ்வை எழுதினா். தோ்வு முடிவுகள் ஜூன் 30-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்தச்சூழலில், நீட் மற்றும் நெட் தோ்வு முறைகேடு சா்ச்சையைத் தொடா்ந்து, ‘க்யூட்’ தோ்வு முடிவுகள் வெளியாவது தாமதமானது. இதனால், மாணவா்கள் கல்லூரிகளில் சோ்க்கை பெற முடியாமல் பாதிக்கப்பட்டனா்.
இந்த நிலையில், க்யூட் தோ்வுக்கான தற்காலிக விடைக் குறிப்புகளை கடந்த 7-ஆம் தேதி என்டிஏ வெளியிட்டது. மேலும், நியாயமான காரணங்களால் பாதிக்கப்பட்ட 1,000-க்கும் அதிகமான மாணவ, மாணவிகளுக்கு கடந்த 19-ஆம் தேதி மறுதோ்வை என்டிஏ நடத்தியது.
அதனைத் தொடா்ந்து, இந்தத் தோ்வுக்கான இறுதி விடைக் குறிப்புகளை என்டிஏ வியாழக்கிழமை வெளியிட்டது.
இதுகுறித்து என்டிஏ மூத்த அதிகாரிகள் கூறுகையில், ‘தோ்வுக்கான இறுதி விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. விரைவில் முடிவுகள் வெளியாகும்’ என்றாா்.