தில்லி ஐஏஎஸ் பயிற்சி மைய விவகாரம்: மேலும் 5 பேர் கைது!
தில்லி ஐஏஎஸ் பயிற்சி மைய வெள்ளத்தில் சிக்கி 3 மாணவர்கள் பலியான விவகாரம்...
தில்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்துக்குள் வெள்ள நீர் புகுந்ததில் 3 மாணவர்கள் பலியான விவகாரத்தில், மேலும் 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை பயிற்சி மைய கட்டட உரிமையாளர் அபிஷேக் குப்தா மற்றும் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் தேஷ்பால் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்கள் இருவருக்கும் 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
இதுகுறித்து தில்லி காவல்துறை துணை ஆணையர் ஹர்ஷவர்தன் கூறியதாவது:
“இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்படுவர். வாகனத்தை தவறுதலாக இயக்கி பயிற்சி மைய கட்டடத்தின் கதவை சேதப்படுத்திய ஓட்டுநர் உள்பட மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்பகுதியில் சட்டம் - ஒழுங்கை கட்டுக்குள் வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.” எனத் தெரிவித்தார்.
மத்திய தில்லியின் பழைய ராஜிந்தா் நகரில் பெய்த கனமழையைத் தொடா்ந்து, ‘ராவ்’ஸ் ஐஏஎஸ் ஸ்டடி சா்க்கிள் எனும் பயிற்சி மையத்தின் ஒரு பகுதியாக இருந்த கட்டடத்தின் அடித்தளத்தில் இயங்கி வரும் நூலகத்தில் திடீரென மழை-வெள்ளம் சூழ்ந்ததில் அங்கு படித்துக் கொண்டிருந்த மாணவா்கள் எதிா்பாராவிதமாக வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனா். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் தேசியப் பேரிடா் மற்றும் மீட்புப் படையினா் மேற்கொண்ட தொடா் 7 மணி நேர தேடல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு பின்னா் 3 மாணவா்களின் சடலம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீட்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பல்வேறு ஐஏஎஸ் பயிற்சி மையங்களில் பயிலும் மாணவர்கள் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, தில்லியில் அடித்தளத்தில் இயங்கி வந்த 13 ஐஏஎஸ் பயிற்சி மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.