வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: கேரள எம்பிக்கள்
வயநாடு நிலச்சரிவு நிவாரணமாக உடனடியாக ரூ. 5,000 கோடி விடுவிக்க கோரிக்கை.
வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் கேரள எம்பிக்கள் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியுள்ளனர்.
வயநாடு மாவட்டம் மேம்பாடி அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் 100-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர். இதுவரை 42 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
மேலும், வயநாடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு கேரள நிலச்சரிவு குறித்து விவாதிக்க இன்று ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் எம்பிக்களால் வழங்கப்பட்டிருந்தது.
மாநிலங்களவையில் வயநாடு நிலச்சரிவு குறித்து குரலெழுப்பிய கேரள எம்பிக்கள், தேசிய பேரிடராக அறிவித்து உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நிவாரணத் தொகையாக ரூ. 5,000 கோடி விடுவிக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
இதுகுறித்து பேசிய மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர், வயநாடு நிலச்சரிவு விபத்தை அரசியலாக்க வேண்டாம் என்று எம்பிக்களிடம் வலியுறுத்தினார்.