மாயமான 22 மலையேற்ற வீரர்களில் 5 பேரின் உடல்கள் மீட்பு!
உத்தரகாசியில் மாயமான 22 மலையேற்ற வீரர்களில் 5 பேரின் உடல்கள் மீட்பு
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் மாயமான 22 பேர் கொண்ட மலையேற்ற குழுவில் 11 பேர் மீட்கப்பட்டு டேராடூன் அருகே உள்ள சஹஸ்த்ரதாரா ஹெலிகாப்டர் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
இருவர் ஏற்கெனவே அடிவார முகாமுக்கு புதன்கிழமை கொண்டுவரப்பட்டுள்ளனர். மேலும் உயிரிழந்த 5 பேரின் உடல்கள் மாநில பேரிடர் மீட்புக் குழுவால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
22-ல் பேரில் இன்னும் நிலை அறியவியலாத 4 பேரை தேடும் பணி வான் வழி மற்றும் தரை வழி மார்க்கத்தில் தொடர்ந்துவருவதாக மீட்புக் குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தரகாசி சஹஸ்தரதல் செல்லும் வழியில் மோசமான வானிலை காரணமாக வழியை தொலைத்ததால் 22 பேர், செவ்வாய்க்கிழமை மலை பகுதியில் மாயமாகினர்.
இவர்களில் 18 பேர் கர்நாடகத்தை சேர்ந்தவர்கள், ஒருவர் மஹாராஷ்டிரத்தை சேர்ந்தவர் மற்றும் மூவர் உள்ளூர் வழிகாட்டிகள்.
முன்னதாக மாநில பேரிடர் மீட்புப் படை, ஆறு மலையேற்ற பயணிகளை சஹஸ்தரதல் மலை பாதையில் இருந்து மீட்டு மருத்துவமனையில் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.