மசூதியின் முன் கோஷம் எழுப்பிய பாஜகவினருக்கு கத்திக்குத்து!
கர்நாடகாவில் மசூதியின் முன் வெறுப்பைத் தூண்டும் விதமான கோஷங்களை எழுப்பிய பாஜகவினர் 2 பேருக்குக் கத்திக்குத்து!
மங்களுர் மாவட்ட கோனாஜே பகுதியைச் சேர்ந்த பொல்லாரிலுள்ள மசூதியின் முன் நேற்று இரவு பாஜகவினர் இரண்டு பேர் கத்தியால் குத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று பதவியேற்றதைத் தொடர்ந்து, அதனைக் கொண்டாடும் விதமாக பாஜகவைச் சேர்ந்த மூன்று நபர்கள் நேற்று (ஜூன் 9) இரவு பொல்லாரி பகுதி மசூதியின் முன் நின்று வெறுப்பைத் தூண்டும் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்து 20-25 நபர்கள் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். மசூதியிலிருந்து 2 கி.மீ தொலைவிலுள்ள மதுக்கடைக்கு முன் வண்டியை நிறுத்திய பாஜகவினருடன் அந்தக் குழுவினருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மூவரும் அவர்களால் தாக்கப்பட்டு தாக்கப்பட்டு அதில் ஹரிஷ் (41), நந்தகுமார் (24) ஆகிய இருவர் கத்தியால் குத்தப்பட்டனர்.
இதனை, மங்களூர் காவல்துறை ஆணையர் அனுபம் அகர்வால் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.
மூவரும் கே.எஸ்.ஹெக்டே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், கத்தியால் குத்தப்பட்ட இருவருக்கும் அறுவை சிகிச்சை நடைபெறுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், தாக்குதலுக்குள்ளானவர்கள் மூவரும் இன்னோலி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.