அரசியலைவிட சினிமாவில் பணியாற்றுவது எளிது: கங்கனா
“முதல் படம் வெளியான போதே அரசியலில் இணைய வாய்ப்புகள் வந்தன.”
அரசியலைவிட சினிமா துறையில் பணியாற்றுவது எளிது என்று பாலிவுட் நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த செய்தி நிறுவனத்துக்கு சமீபத்தில் பேட்டியளித்த கங்கனா, தனது முதல் படம் வெளியானது முதல் அரசியலில் இணைய கட்சிகள் அணுகி வருவதாகவும், தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் அரசியலில் சேர வாய்ப்புகள் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கங்கனா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
Advertisement
Advertisement
“கேங்ஸ்டர் படம் வெளியானவுடன் அரசியலில் இணைய என்னை அணுகினார்கள். எனது கொள்ளுத் தாத்தா மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர். இதுபோன்ற குடும்பத்தில் இருந்து சிறிது பிரபலமடையும் போது உள்ளூர் அரசியல் தலைவர்கள் அணுகுவது வழக்கம். எனது தந்தை, ஆசிட் தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்த எனது சகோதரி உள்ளிட்டோருக்கும் அரசியலில் இணைய வாய்ப்பு அளித்தனர். ஆகவே, அரசியல் கட்சிகள் எங்களை அணுகுவதும் வாய்ப்பு கிடைப்பதும் பெரிய விஷயம் இல்லை. நான் அரசியலில் ஆர்வம் காட்டாமல் இருந்திருந்தால், இவ்வளவு சிரமங்களை சந்தித்திருக்க வேண்டியதில்லை.
நான் இலக்கை நோக்கி பயணம் செய்யக் கூடியவர். சினிமா துறையில் நடிகை, இயக்குநர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளராக உள்ளேன். அரசியல் வாழ்க்கையில் மக்களுடன் என்னை தொடர்புபடுத்திக் கொள்ள வேண்டும் என்றால் எவ்வித நிர்பந்தமுமின்றி நான் முன்னேறிச் செல்லவேன்.
இருப்பினும், அரசியலை விட சினிமா துறையில் வேலை செய்வது ஒப்பீட்டளவில் எளிதானது என்பதை நான் மறுக்க மாட்டேன். மருத்துவர்களை போன்று இதுவும் கடினமான வாழ்க்கை. பிரச்னை உள்ளவர்கள் மட்டுமே அரசியல்வாதிகளை பார்க்க வருவார்கள். படம் பார்க்க போனால் நிம்மதியாக இருக்கும், ஆனால் அரசியல் அப்படியல்ல.” எனத் தெரிவித்துள்ளார்.
ஹிமாசல் பிரதேசம் மண்டி மக்களவைத் தொகுதியில் முதல் முறையாக பாஜக சார்பில் போட்டியிட்ட கங்கனா ரணாவத், 74,755 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கடந்த வாரம் சண்டீகர் விமான நிலையத்தில் பெண் பாதுகாப்புப் படை வீராங்கனை கங்கனாவின் கன்னத்தில் அறைந்த காணொலிகள் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.