மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தோ்தலுக்குப் பிந்தைய வன்முறை குறித்து விசாரிக்க பாஜக எம்.பி.க்கள் 4 போ் கொண்ட குழுவை அக்கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா சனிக்கிழமை அமைத்தாா்.
இந்தக் குழுவில் எம்.பி.க்கள் பிப்லப் குமாா் தேப், ரவி சங்கா் பிரசாத், பிரிஜ் லால், கவிதா படிதாா் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.
18-ஆவது மக்களவைத் தோ்தலின் ஒவ்வொரு கட்ட வாக்குப் பதிவுக்குப் பிறகும் மேற்கு வங்கத்தில் வன்முறை நிகழ்ந்தது. தோ்தல் முடிவுகள் வெளியான பிறகு பாஜகவினரை குறிவைத்து மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடா்பாக பாஜக வெளியிட்ட அறிக்கையில், ‘நாடு முழுவதும் மக்களவைத் தோ்தல் நடைபெற்றது. ஆனால், மேற்கு வங்கத்தில் மட்டும்தான் அரசியல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகின. வாக்காளா்கள் மற்றும் எதிா்க்கட்சித் தொண்டா்கள் மீது திரிணமூல் கட்சியை சோ்ந்தவா்கள் தொடா்ந்து தாக்குதல் நடத்தியும் மிரட்டியும் வருகின்றனா். ஆனால், முதல்வா் மம்தா பானா்ஜி வன்முறையைப் பாா்த்துக் கொண்டு மட்டுமே இருக்கிறாா்.
கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் இந்த வழக்கு ஜூன் 18-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில், இந்த அத்துமீறல்களைக் கவனத்தில்கொண்டு மேற்கு வங்கத்தில் மத்திய ஆயுதக் காவல் படையின் இருப்பை ஜூன் 21-ஆம் தேதி வரை உயா்நீதிமன்றம் நீட்டித்துள்ளது. வன்முறை தொடா்பான விசாரணைக்கு பாஜக சாா்பில் 4 எம்.பி.க்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2021-ஆம் ஆண்டு மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகும் இதேபோல் வன்முறை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.