குஜராத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது குழந்தை பலி
குஜராத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது பெண் குழந்தை பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டத்தில் உள்ள சுரக்புரா கிராமத்தில் தோட்டம் ஒன்றில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது பெண் குழந்தை சுமார் 50 அடி ஆழ்துளைக் கிணற்றில் நேற்று விழுந்தது.
தகவலின் பேரில் நிகழ்விடத்துக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படை, அம்ரேலி தீயணைப்புக் குழு மற்றும் 108 ஆம்புலன்ஸ் சேவையைச் சேர்ந்த பணியாளர்கள் உள்ளிட்டோர் இணைந்து குழந்தையை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
சுமார் 15 மணி நேர போராட்டத்துக்கு பிறகு இன்று அதிகாலை 5.10 மணியளவில் குழந்தையை ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்டனர். உடனடியாக அக்குழந்தை அம்ரேலி சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஆனால் அங்கு குழந்தை இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது என்று தீயணைப்பு அதிகாரி காத்வி தெரிவித்தார்.
முன்னதாக வெள்ளிக்கிழமை மத்திய இணை அமைச்சர் பிரஃபுல் பன்ஷேரியா, திறந்தவெளி ஆழ்துளை கிணறுகள் குறித்து அரசுக்குத் தெரிவிக்குமாறு மாநில மக்களைக் கேட்டுக்கொண்டார்.
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது பெண் குழந்தை பலியான நிகழ்வு குஜராத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.