ஹிமாசலில் பேருந்து விபத்து: முதல்வர், ஆளுநர் இரங்கல்!
ஹிமாசலில் பேருந்து விபத்துக்கு முதல்வர், ஆளுநர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஹிமாசலப் பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் குட்டு-கில்டாரி சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை பேருந்து கவிழ்ந்ததில் 4 பேர் பலியாகினர். மேலும், 3 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹிமாசல் ரோடுவேஸ் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் பேருந்து, ஏழு பேருடன், குடுவிலிருந்து கில்டாரிக்கு சென்று கொண்டிருந்தபோது, சௌரி கைஞ்சி அருகே காலை 6:45 மணியளவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மலைப் பாதையில் இருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பயணிகள் பிர்மா தேவி, தன்ஷா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பேருந்து ஓட்டுநர் கரம்தாஸ், நடத்துனர் ராகேஷ் குமார் ஆகியோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
மேலும், காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து முதற்கட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என நிர்வாக இயக்குனர் ரோஹன்சந்த் தாக்கூர் தெரிவித்தார்.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஹிமாசலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி,ஆளுநர் ஷிவ் பிரதாப் சுக்லா மற்றும் கல்வி அமைச்சர் ரோஹித் தாக்கூர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து முதல்வர் சுக்விந்தர் சுகு தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று காலை சிம்லா மாவட்டம் ஜுப்பல் பகுதியில் குடுவில் இருந்து கில்டாரிக்கு சென்று கொண்டிருந்த ஹெச்ஆர்டிசி பேருந்தில் ஓட்டுநர், நடத்துனர் உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், அவர்களது குடும்பத்தினருக்கு வலிமை கிடைக்கவும் பிரார்த்திக்கிறேன். இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.