தேசிய பூங்காவில் மின்சாரம் தாக்கி 2 குட்டிகளுடன் சிறுத்தை பலி!
தேசிய பூங்காவில் மின்சாரம் தாக்கி 2 குட்டிகளுடன் சிறுத்தை பலியானது.
ராஜஸ்தானின் சரிஸ்கா தேசிய பூங்காவில் மின்சாரக் கம்பி அறுந்து விழுந்ததில் சிறுத்தையும், அதன் இரண்டு குட்டிகளும் பலியானதாக மாவட்ட வன அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தின் அம்ரத்வாஸ் கிராமத்திற்கு அருகிலுள்ள டெஹ்ரா-ஷாபுரா மலைத்தொடரில் இந்த சம்பவம் நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அல்வார் மாவட்ட வன அதிகாரி ராஜேந்திர சிங் கூறுகையில், மின்சார கம்பி அறுந்து சிறுத்தை மற்றும் அதன் இரண்டு குட்டிகள் மீது விழுந்தது. இதனால், சம்பவ இடத்திலேயே தாய் சிறுத்தை மற்றும் அதன் குட்டிகள் பரிதாபமாக பலியாகியுள்ளன.
அல்வார் மாவட்ட கால்நடை மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தி உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.