‘ஜெய் பாலஸ்தீனம்’: மக்களவையில் ஓவைசி முழக்கம்!
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஓவைசிக்கு கண்டனம்.
மக்களவை உறுப்பினராக பதவியேற்ற ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன், பாலஸ்தீனம் வாழ்க என்று முழக்கமிட்டார்.
18-வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மக்களவையில் பதவியேற்று வரும் நிலையில், ஹைதராபாத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஓவைசி பதவியேற்றுக் கொண்டார்.
மக்களவை உறுப்பினராக பதவியேற்ற பிறகு இறுதியில் ‘ஜெய் பீம், ஜெய் தெலங்கானா, ஜெய் பாலஸ்தீனம்’ என்று முழக்கமிட்டார்.
இந்த செயல் குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்கள் மத்தியில் கூறியதாவது:
“பாலஸ்தீனம் அல்லது வேறெந்த நாட்டுடனோ எங்களுக்கு பகை இல்லை. பதவிப் பிரமாணம் செய்யும்போது எந்த உறுப்பினரும் மற்ற நாட்டைப் புகழ்ந்து முழக்கம் எழுப்புவது முறையா. அது சரியா என்பது குறித்து விதிமுறைகளில் சரிபார்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் இருந்து மக்களவைக்கு தேர்வான அனைத்து எம்பிக்களும் அரசியல் சாசனத்தை கையில் ஏந்தி தமிழில் பதவியேற்றுக் கொண்டனர்.