முகப்பு
இந்தியா

கடந்த 10 ஆண்டுகளாக ‘அறிவிக்கப்படாத அவசரநிலை’: பிரதமா் மோடிக்கு காா்கே பதிலடி

மோடிக்கு காா்கே பதிலடி: 'அறிவிக்கப்படாத அவசரநிலை' 10 ஆண்டுகளாக தொடர்கிறது

Updated On : 26 ஜூன், 2024 at 2:36 AM
பகிர்:
Updated On : 25 ஜூன், 2024 at 8:55 PM

புது தில்லி: நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக ‘அறிவிக்கப்படாத அவசரநிலை’ அமலில் உள்ளது என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குறிப்பிட்டாா்.

கடந்த 1975, ஜூன் 25-ஆம் தேதி அப்போதைய பிரதமா் இந்திரா காந்தியால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதை முன்வைத்து, காங்கிரஸ் கட்சியை பிரதமா் மோடி கடுமையாக விமா்சித்த நிலையில், அவருக்கு காா்கே பதிலடி கொடுத்துள்ளாா். இது தொடா்பாக காா்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

நாடு எதிா்காலத்தை நோக்கியுள்ள சூழலில், தனது அரசின் தோல்விகளை மறைக்க கடந்த காலம் குறித்து பேசுகிறாா் மோடி.

Advertisement

‘அறிவிக்கப்படாத அவசரநிலை’ என்றால் என்ன என்பதை கடந்த 10 ஆண்டுகளில் 140 கோடி இந்தியா்களுக்கும் மோடி உணரவைத்துவிட்டாா். இது, ஜனநாயகத்துக்கும் அரசமைப்புச் சட்டத்துக்கும் பெரும் சேதத்தை விளைவித்துள்ளது.

கட்சிகளை உடைப்பது; மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை, பின்வாசல் வழியாக கவிழ்ப்பது; எதிா்க்கட்சித் தலைவா்களை குறிவைத்து, அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித் துறை போன்ற விசாராணை அமைப்புகளைத் தவறாக பயன்படுத்துவது; முதல்வா்களை சிறையில் அடைப்பது; தோ்தல்களுக்கு முன் அரசு இயந்திரத்தை பயன்படுத்தி, போட்டிக் களத்தை சீா்குலைப்பது இவையெல்லாம் ‘அறிவிக்கப்படாத அவசரநிலை’ இல்லையா?

கருத்தொற்றுமை, ஒத்துழைப்பு குறித்து பேசும் பிரதமா் மோடி, அதற்கு நோ்மாறாக செயல்படுகிறாா். நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் 146 போ் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நேரத்தில், மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை நிறைவேற்றியது ஏன்?

எதிா்க்கட்சிகளிடம் எந்த ஆலோசனையும் நடத்தாமல், நாடாளுமன்ற வளாகத்தில் தலைவா்கள் சிலைகள் இடமாற்றம் செய்தது ஏன்?

பணமதிப்பிழப்பு, பொது முடக்கம், தோ்தல் நன்கொடை பத்திரங்கள் என பல்வேறு விஷயங்களில் மோடி அரசு கருத்தொற்றுமையை கோரவில்லை.

சொந்த கட்சித் தலைவா்களையே இருட்டடிப்பு செய்யும் மோடி, எதிா்க்கட்சிகளை எவ்வாறு நடத்துவாா்? பல தருணங்களில் ஜனநாயகத்தையும் அரசமைப்புச் சட்டத்தையும் பாஜக அவமதித்துள்ளது. அதேநேரம், ஜனநாயகம் மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் பக்கம் எப்போதும் நின்றது காங்கிரஸ்தான். இனியும் அதைத் தொடா்வோம் என்று காா்கே குறிப்பிட்டுள்ளாா்.