வெளியே வருவாரா அரவிந்த் கேஜரிவால்? இன்று தெரியும்
வெளியே வருவாரா அரவிந்த் கேஜரிவால்? தில்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு, தில்லி விசாரணை நீதிமன்றம் பிணை வழங்கி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை தொடர்ந்த மனு மீது தில்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவிருக்கிறது.
ஏற்கனவே, அமலாக்கத் துறை தொடர்ந்த மனு மீது, விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த பிணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அரவிந்த் கேஜரிவால் பிணையில் வெளியே வர அனுமதி கிடைக்குமா என்பது குறித்து தில்லி உயர் நீதிமன்றம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தீர்ப்பளிக்கவிருக்கிறது.
தில்லி மதுபான கொள்கை முறைகேடு விவகாரம் தொடர்புடைய சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அரவிந்த கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்கி விசாரணை நீதிமன்ற உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத் துறை தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தில்லி உயர்நீதிமன்றம், மனு மீதான விசாரணை முடிவடையும் வரை, ஜாமீன் வழங்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. தொடர்ந்து, அமலாக்கத் துறை மனு மீது விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்படவிருக்கிறது.
ஜாமீன் உத்தரவுக்கு, தில்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததை எதிர்த்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளார்.
தில்லி கலால் கொள்கை முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கேஜரிவாலை கடந்த மார்ச் 21-ஆம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது. அவருக்கு விசாரணை நீதிமன்றம் ஜூன் 20-ஆம் தேதி ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து அமலாக்கத் துறை சார்பில் தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று பிற்பகல் 2.30 மணிக்கு இந்த மனு மீது தீர்ப்பளிக்கப்படவிருக்கிறது.