முகப்பு
இந்தியா

மியான்மா் துணை பிரதமருடன் ஜெய்சங்கா் சந்திப்பு

மியான்மரில் மக்களாட்சி திரும்ப வேண்டும்: ஜெய்சங்கா் வலியுறுத்தல்

Updated On : 26 ஜூன், 2024 at 7:56 PM
பகிர்:

மியான்மா் துணை பிரதமா் உ-தான்-ஷுயியை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை சந்தித்தாா்.

கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்.1-ஆம் தேதி மியான்மரில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதைத்தொடா்ந்து அந்நாட்டில் ராணுவத்துக்கும் கிளா்ச்சிப் படைகளுக்கும் இடையே தீவிர மோதல் நடைபெற்ற வருகிறது.

இந்நிலையில், தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு மியான்மா் துணை பிரதமா் உ-தான்-ஷுயி தாயகம் திரும்பினாா். தில்லி வழியாக புதன்கிழமை சென்ற அவரை வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் சந்தித்தாா்.

இந்தச் சந்திப்பு தொடா்பாக ஜெய்சங்கா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மியான்மரில் நீடித்து வரும் வன்முறை மற்றும் நிச்சயமற்ற சூழலால் இந்தியா-மியான்மா் எல்லையில் ஏற்படும் பாதிப்பு குறித்து உ-தானுடன் ஆலோசித்தேன்.

குறிப்பாக இருநாட்டு எல்லைகளில் நடைபெறும் போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் ஆள்கடத்தல் பிரச்னைகள் குறித்து பேசினேன்.

மியான்மா்-தாய்லாந்து எல்லையில் உள்ள மியாவடி பகுதியில் வேலைவாய்ப்பு அளிப்பதாக விடுக்கப்பட்ட அழைப்பை நம்பி மோசடிக்குள்ளான சுமாா் 100 இந்தியா்களை விரைந்து மீட்க அவரிடம் ஒத்துழைப்பு கோரினேன்.

மியான்மா் விரைந்து மக்களாட்சி பாதைக்குத் திரும்ப வேண்டும் என்றும், அதற்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாகவும் அவரிடம் தெரிவித்தேன்’ என்றாா்.

மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னா், அந்நாட்டு ராணுவ ஆட்சியாளா்களில் மூத்த தலைவா் ஒருவருடன் இந்தியாவில் அதிகாரபூா்வ சந்திப்பு நடைபெற்றது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →