நடுவானில் விமானத்தில் அத்துமீறி புகைபிடித்த பயணி!
விமானம் பறந்துக்கொண்டிருந்தபோது பயணி ஒருவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தில்லியில் இருந்து மும்பை செல்லும் விமானத்தின் கழிவறைக்குள் புகைபிடித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
தலைநகர் தில்லியில் இருந்து மும்பைக்கு 176 பயணிகளுடன் நேற்று மாலை இண்டிகோ விமானம் புறப்பட்டது. அப்போது நடுவானில் விமானம் பயணித்துக்கொண்டிருந்தபோது விமானத்தின் கழிவறையிலிருந்து புகை வந்ததை விமானத்தில் இருந்த ஸ்மோக் சென்சார்கள் மூலம் கேபின் குழுவினருக்கு எச்சரிக்கை வந்தது.
இதையடுத்து, கழிவறையிலிருந்து வெளியே வந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கலீல் காஜம்முல் கான் (வயது 38) என்ற பயணியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கழிவறையில் புகைபிடித்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
விமானம் மும்பை வந்தடைந்ததும் விமான கழிவறையில் அத்துமீறி புகைபிடித்த பயணியான கலீல் கான் குறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பயணி கலீல் மீது அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.