அமர்நாத் முகாம்களில் மருத்துவமனைகள் அமைத்த ஓஎன்ஜிசி!
தற்போது திறக்கப்பட்டுள்ள இரண்டு மருத்துவமனைகளும் யாத்திரைக்குப் பிறகும் சேவை தொடரும் என அறிவிப்பு...
காஷ்மீரில் உள்ள இரண்டு அடிப்படை முகாம்களிலும் 100 படுக்கை வசதிகள் கொண்ட இரண்டு மருத்துவமனைகளை ஓஎன்ஜிசி அமைத்துள்ளது.
வருடாந்திர அமர்நாத் யாத்திரை இன்று முதல் தொடங்கியுள்ளது. தொடர்ந்து 52 நாள்கள் நடைபெற உள்ளது. அனந்த்நாக்கில் 48 கி.மி நுன்வான்-பஹல்காம் பாதை மற்றும் கந்தர்பாலில் 14 கி.மீட்டர் செங்குத்தான பால்டால் பாதையிலும் மக்கள் பயணிக்க உள்ளனர்.
பிராந்தியத்தின் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையுடன் ஓஎன்ஜிசி நிறுவனம் இணைந்துள்ளது. நிலையான சுகாதார உள்கட்டமைப்பின் அவசியத்தை உணர்ந்து ஓஎன்ஜிசி அதன் சமூகப் பொறுப்புணர்வு முயற்சியின் கீழ் அனந்த்நாக்கில் பால்டால் மற்றும் சந்தன்வாரி-பஹல்காம் ஆகிய அடிப்படை முகாம்களில் இரண்டு மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளது.
Advertisement
ஒவ்வொரு மருத்துவமனையிலும் 100 படுக்கை வசதிகள், மருத்துவர்கள், தீவிர சிகிச்சை பிரிவுகள் மற்றும் தேவையான மருந்துகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. அமர்நாத் யாத்திரை வழித்தடத்தில் அமைந்துள்ள இந்த மருத்துவமனைகளில் பக்தர்கள் தங்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளைைச் செய்துகொள்ளலாம்.
கடந்தாண்டு வரை இரண்டு முகாம்களிலும் தற்காலிக மருத்துவ வசதிகள் இயங்கி வந்தன. இதனால் குறிப்பிடத்தக்க செலவுகள் மற்றும் ஒருசில சிக்கலும் இருந்துவந்தது. தற்போது திறக்கப்பட்டுள்ள இரண்டு மருத்துவமனைகளும் யாத்திரைக்குப் பிறகும் தொடர்ந்து செயல்படும், அவற்றின் செயல்பாடு மற்றும் பராமரிப்பைச் சுகாதாரத் துறை மேற்பார்வையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சுகாதார அணுகலை மேம்படுத்துதல், செயல்பாட்டுச் செலவுகளைக் குறைத்தல் மற்றும் உள்ளூர் மக்களுக்கு வரும் ஆண்டுகளில் தொடர்ச்சியான மருத்துவ ஆதரவை உறுதி செய்தல் ஆகியவற்றில் ஒரு முக்கிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது.