முகப்பு
இந்தியா

பெங்களூரு உணவகத்தில் ரவா இட்லி சாப்பிட்ட மர்ம நபர்; ஏஐ உதவியை நாடும் காவல்துறை

பெங்களூரு உணவகத்தில் ரவா இட்லி சாப்பிட்டு ஏழு நிமிடங்கள் இருந்துள்ளார் மர்ம நபர்; முகத்தை அடையாளம் காண ஏஐ உதவியை நாடும் காவல்துறை.

Updated On : 2 மார்ச், 2024 at 6:55 AM
பகிர்:

பெங்களூரு: பெங்களூரு உணவகத்தில் ராமேஸ்வரம் கஃபேவில் டைமர் வெடிகுண்டுடன் வந்த நபர், உணவத்தில் ரவா இட்லி ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு, பையை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றுள்ளது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருக்கிறது.

தொடர்ந்து, தொப்பி அணிந்துவந்த நபருக்கு 25 - 30 வயது இருக்கலாம் என்றும், அவரது முகத்தை செயற்கை நுண்ணறிவு உதவியுடன் உருவாக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

சிசிடிவி காட்சிகளின்படி, முற்பகல் 11.30 மணிக்கு, மர்ம நபர் உணவகத்துக்கு எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பேருந்திலிருந்து இறங்குகிறார். உணவகத்துக்கு வந்து ரவா இட்லி வாங்கி சாப்பிடுகிறார். 11.44க்கு வெடிகுண்டு இருக்கும் பையை உணவகத்தில் வைத்துவிட்டு வெளியேறுகிறார்.

12.55 மணிக்கு உணவகத்தில் குண்டு வெடிக்கிறது. உடனடியாக காவல்துறையினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அதாவது, ஏழு நிமிடங்கள் உணவகத்தில் இருந்த மர்ம நபர், பையை குப்பைத்தொட்டிக்கு அருகே வைத்துவிட்டுச் சென்றுவிடுகறிர். அவர் சென்று ஒரு மணி நேரத்துக்குப் பிறகுதான் குண்டு வெடிக்கிறது. இது டைமர் இணைக்கப்பட்ட வெடிகுண்டு என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள உணவகத்தில் வெள்ளிக்கிழமை நண்பகல் குண்டு வெடித்தது. இதில், 10 பேர் பலத்த காயமடைந்தனர்.

முதலில் சமையல் எரிவாயு உருளை வெடித்ததாகக் கூறப்பட்ட நிலையில், அங்கு சுமார் 30 வயதான மர்ம நபர் வைத்துச் சென்ற பையில் இருந்த டைமர் வெடிகுண்டு வெடித்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ), வெடிமருந்து பொருள்கள் சட்டத்தின் கீழ் பெங்களூரு குற்றப்பிரிவு போலீசார் வழக்கப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், ராமேஸ்வரம் கஃபேயில் நடந்த வெடிகுண்டு விவகாரம் தொடர்பாக தற்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.

சிசிடிவி காட்சிகளைக் கொண்டு முக்கிய ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. தொடர்ச்சியாக பதிவாக சிசிடிவி காட்சிகள் மற்றும் பேருந்து நிலையத்தில் பதிவான காட்சிகளையும் கொண்டு குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இன்று மதியம், முதல்வர் சித்தராமையா தலைமையில் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அப்போது, விசாரணை மற்றும் அடுத்தகட்ட விசாரணை குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விசாரணைக்கு பல்வேறு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.