ஆந்திரப் பிரதேச தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி இந்த முறை பெரும் தோல்வியை சந்திப்பார் என்று தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய ‘ஹைதராபாத் டையலாக்ஸ்’ என்ற நிகழ்வில் பங்கேற்ற பிரசாந்த் கிஷோர் இதனைத் தெரிவித்தார்.
பிரசாந்த் கிஷோர் பேசியதாவது:
“ஜெகன்மோகன் ரெட்டி தோற்கடிக்க முடியாத வலிமையானர் என்ற அனுமானம் இருக்கிறது. ஆனால், அவர் கீழ் நோக்கிச் செல்கிறார். என்னிடம் ஆந்திர அரசியலைப் பற்றிய தரவுகளோ, முன் அனுபவமோ இல்லை. ஆனால், அவர் பெரிய அளவிலான தோல்வியை சந்திப்பார்.
மக்களுக்கு வழங்கும் இலவசங்களால் வெற்றி பெறலாம் என்று நினைத்தால், அது நடக்காமல் போகலாம். ஏனெனில், இலவச திட்டங்களுக்கு 50 சதவிகித மக்கள் தகுதியற்றவர்களாக உள்ளனர். அவர்களிடம் அரசு சென்றடையவில்லை.
பிகார் அல்லது ஜார்கண்டில் சாதி ரீதியான போட்டியை பற்றி பேசலாம், ஆனால் தமிழ்நாடு, தெலங்கானா அல்லது ஆந்திராவில் முடியாது. அவர்கள் தொழிற்சாலைகள், சிறந்த சாலைகள், மருத்துவம் மற்றும் கல்வி வசதிகளை எதிர்பார்க்கின்றனர்.
நான் ஆந்திரத்தை சார்ந்தவனாக இருந்தால், விஜயவாடா அல்லது விசாகபட்டினம் வருங்கால நகரமாக வரப்போகிறது என்று பெருமிதம் கொள்வேனா?. எனது பக்கத்து மாநிலத்தின் நகரங்களான சென்னை, கொச்சி அல்லது ஹைதராபாத்தைவிட தாழ்வாக உணர்வேன். ஜெகன் மீண்டும் ஆட்சிக்கு வருவது கடினம் என்று கணிப்பது கடினமல்ல.” எனத் தெரிவித்திருந்தார்.
பிரசாந்த் கிஷோரின் கருத்தை விமர்சித்துள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், “தற்போது பிரசாந்த் கிஷோர் தேர்தல் யுத்தி வகுப்பாளர் அல்ல, அரசியல்வாதி. தெலங்கானா, ஹிமாசல் மற்றும் சத்தீஸ்கரில் அவரது கணிப்புகள் தவறாகியுள்ளது.” என்று விமர்சித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.