உ.பி.யில் மனைவியை உயிருடன் எரித்த கொடூரம்!
மனைவியை உயிருடன் எரித்த அதிர்ச்சி சம்பவம்...
உத்தரப் பிரதேசத்தின் நைத்துவா கிராமத்தில் மனைவியை உயிருடன் எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முஜாரியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புடானில் உள்ள நைத்துவா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்ட முனீஸ் சக்சேனா மதுவுக்கு அடிமையானவர். இவருக்கு மனைவி ஷானோ மற்றும் சன்னி, அர்ஜூன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
Advertisement
இதுதொடர்பாக மூத்த காவல் கண்காணிப்பாளர் அலோக் பிரியதர்ஷி கூறுகையில்,
வியாழன் இரவு குடிபோதையில் வீடு திரும்பியுள்ளார் முனீஸ், அவரது மனைவி ஷனோ வழக்கம்போல் சத்தம் போட்டதுடன், மேலும் குடிப்பதைத் தடுத்துள்ளார். கோபமடைந்த முனீஸ் தனது இருசக்கர வாகனத்திலிருந்து பெட்ரோலை எடுத்து, மனைவி மீது ஊற்றி, தீ வைத்துள்ளார்.
ஷானோவின் மாமியார் முன்னி தேவி மருமகளை காப்பாற்ற சென்றுள்ளார். ஆனால், தீ மளமளவென எரிய தொடங்கியதால், காப்பாற்ற இயலாமல், அவரது கைகளில் காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்த குழந்தைகள் சத்தம் போட்டு அலறினர்.
இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் ஷானோவின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மாமியார் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தலைமறைவான சக்சேனாவைத் தேட போலீஸ் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.