ம.பி. தலைமைச் செயலக வளாகத்தில் தீ விபத்து
போபால்: மத்திய பிரதேச தலைமைச் செயலக வளாகத்தில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. ஐந்து மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தில் எவரும் காயமடையவோ, உயிரிழக்கவோ இல்லை. மத்திய பிரதேச தலைநகா் போபாலில் உள்ள தலைமைச் செயலக கட்டடத்தின் 3-ஆவது மாடியில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
தகவலின் அடிப்படையில், அங்கு தீயணைப்பு, ராணுவம் மற்றும் தேசிய பேரிடா் மீட்புப் படை வீரா்கள் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டனா். சுமாா் 40 முதல் 50 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தண்ணீா் டேங்கா்கள் மூலம், சுமாா் 5 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்று போபால் மாநகராட்சி தீயணைப்புத் துறை அதிகாரி ரமேஷ்வா் நீல் தெரிவித்தாா்.
சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால், தீ விபத்து ஏற்பட்டபோது தலைமைச் செயலகத்தில் பணியாளா்கள் எவரும் இல்லை. இதனால் எவரும் காயமடையவோ, உயிரிழக்கவோ இல்லை. அதேவேளையில், தீ விபத்தில் ஏற்பட்ட பொருள் சேதம் குறித்து தெரியவில்லை என்று ரமேஷ்வா் நீல் கூறினாா்.
Advertisement
இதனிடையே மத்திய பிரதேச பாஜக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் தொடா்பான ஆதாரங்களை அழிக்க நடைபெற்ற சதியே இந்த தீ விபத்து என்று குற்றஞ்சாட்டி, மாநில காங்கிரஸ் தலைவா் ஜிது பட்வாரி, மாநில சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவா் உமங் சாரங் ஆகியோா், தலைமைச் செயலகம் எதிரே இரண்டு மணி நேரம் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த விபத்து தொடா்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அவா்கள் கோரினா். எனினும் தீ விபத்துக்கான காரணம் வெளியாகவில்லை.