நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான அனைத்து இடங்களும் "நீட்' தகுதித் தேர்வு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதன்படி வரும் மே மாதம் 5ஆம் தேதி நடைபெறவிருக்கும் நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்கியது.
இதுவரை 21 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வு 3 மணி நேரம் 20 நிமிடங்கள் நடக்கும். இதில் தேர்வாகும் மாணவர்களே அரசுக்கு ஒதுக்கப்படும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்சி செவிலியர், பிஏஎம்எஸ், கால்நடை மருத்துவம் மற்றும் இதர துணை மருத்துவக் கல்விகளுக்கும் சேர்க்கை பெற முடியும். தேர்வுக்கு விண்ணப்பிக்க (மார்ச் 9)நேற்று கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை வரும் மார்ச் 16ஆம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 13 மொழிகளில் நடத்தப்படும் இத்தேர்வினை இந்த ஆண்டு சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.