பிரதமர் மோடி மார்ச் 15, 17 ஆகிய தேதிகளில் கேரள மாநிலத்துக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக வேட்பாளர்களுக்குப் பிரசாரம் மேற்கொள்வதற்காக மார்ச் 15-ம் தேதி பாலக்காடு செல்கிறார்.
இதைத் தொடர்ந்து, பாஜக வேட்பாளரும், காங்கிரஸ் பிரமுகருமான ஏ.கே. ஆண்டனியின் மகனுமான அனில் கே. ஆண்டனிக்கு ஆதரவைத் திரட்டுவதற்காக மார்ச் 17-ம் தேதி பத்தனம்திட்டாவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலக்காடு வரும் பிரதமர் மோடி அங்குப் பிரம்மாண்டமான சாலைப் பேரணியில் ஈடுபட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. பொதுக்கூட்டங்கள் எதுவும் இல்லை என்றாலும், பாலக்காடு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
பாலக்காடு பயணத்தின்போது, பாலக்காடு, ஆலத்தூர் மற்றும் பொன்னானி மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் மூன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கான பிரசாரத்தில் மோடி கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மூன்று மாதங்களில் மோடி பாலக்காடுக்கு நான்காவது முறையாகவும், பத்தனம்திட்டாவுக்கு ஐந்தாவது முறையாகவும் வருகை தரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.