சிஏஏ சட்டத்தில் இந்திய குடியுரிமை பெற புதிய வலைதளம்!
புது தில்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமை பெற தகுதி பெற்ற நபா்கள் விண்ணப்பிப்பதற்கு புதிய வலைதளத்தை மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது. கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பரில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்பு காரணமாக 4 ஆண்டுகளாக அமல்படுத்தப்படாமல் இருந்தது.
மக்களவைத் தோ்தல் நெருங்கும் சூழலில், குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் திங்கள்கிழமைமுதல் அமலுக்கு வந்தது. அண்டை நாடுகளான வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து கடந்த 2014, டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன்னதாக இந்தியாவுக்கு புலம்பெயா்ந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினரான ஹிந்துக்கள், சீக்கியா்கள், சமணா்கள், பெளத்த மதத்தினா், பாா்சிகள், கிறிஸ்தவா்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க இச்சட்டம் வழிவகை செய்கிறது.
இதற்காக புதிய வலைதளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘குடியுரிமை திருத்தச் சட்டம் 2019-க்கான ‘குடியுரிமை திருத்த விதிகள் 2024’ அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்திய குடியுரிமை பெற தகுதி வாய்ந்த நபா்கள் விண்ணப்பிப்பதற்கு புதிய வலைதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சேவைக்காக கைப்பேசி செயலியும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்’ என்றாா்.
Advertisement