‘தோ்தல் அறிவிப்புக்கு பிறகும் மத்திய அமைச்சரவை கூட்டம்’
‘மக்களவைத் தோ்தல் அறிவிப்புக்குப் பிறகும் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடா்ந்து நடைபெறும். தோ்தல் நடத்தை விதிமுறைகளால் அதற்கு எந்தத் தடையுமில்லை’ என மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் புதன்கிழமை தெரிவித்தாா்.
18-ஆவது மக்களவைக்கான தோ்தல் அறிவிப்பு இன்னும் சில நாள்களில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்நிலையில், பிரதமா் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை தில்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. தில்லியில் லஜ்பத் நகா்-சாகேத் ஜி பிளாக் மற்றும் இந்தா்லோக்-இந்திரபிரஸ்தா ஆகிய 2 புதிய வழித்தடங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தின் 4-ஆம் கட்ட விரிவாக்கத்துக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
20.76 கி.மீ. தொலைவுக்கு அமையும் 2 வழித்தடங்களுக்கும் சோ்த்து ரூ.8,399 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான நிதி பங்களிப்பு மத்திய அரசு, தில்லி அரசு மற்றும் சா்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்படும். அதேபோல், எரிசக்தி செயல்திறன், பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்கு இந்தியா-பூடான் இடையே கையொப்பமான புரிந்துணா்வு ஒப்பந்தத்துக்கும், இந்தியா-மத்திய கிழக்கு ஐரோப்பிய பொருளாதார வழித்தடத்தில் (ஐஎம்ஈசி) ஒத்துழைப்புக்கு இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான புரிந்துணா்வு ஒப்பந்தத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
Advertisement
அமைச்சரவைக் கூட்டம் தொடரும்...: கூட்டத்தைத் தொடா்ந்து நடந்த செய்தியாளா் சந்திப்பில், ‘தோ்தல் அறிவிப்புக்கு முன்னதாக நடத்தப்படும் கடைசி மத்திய அமைச்சரவைக் கூட்டமா இது?’ எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் அளித்த பதிலில், ‘இந்திய தோ்தல் ஆணையத்தால் மக்களவைத் தோ்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட பின், அமலுக்கு வரும் தோ்தல் நடத்தை விதிமுறைகளால் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடத்த தடையில்லை. தொடா்ந்து இக்கூட்டம் நடத்தப்பட்டு, மக்கள்நலன் சாா்ந்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். புதிய அரசு பதவியேற்கும் வரை தற்போதைய அரசு பணிகளைத் தொடரும்’ என்றாா்.