முகப்பு
இந்தியா

மக்களவைத் தோ்தல் தேதி இன்று பிற்பகல் அறிவிப்பு

Updated On : 16 மார்ச், 2024 at 5:18 AM
பகிர்:

புது தில்லி: மக்களவைத் தேர்தல் 2024-க்கான தேர்தல் தேதிகளை தில்லியில் சனிக்கிழமை (மாா்ச் 16) பிற்பகல் 3 மணியளவில் நடைபெறும் பத்திரிகையாளா் சந்திப்பில் அறிவிக்கும் என்றும் மக்களவைத் தோ்தலுடன் ஆந்திரம், ஒடிஸா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் பேரவைத் தோ்தல் தேதிகளும் அறிவிக்கப்படவுள்ளன.

முன்னதாக 2019 மக்களவைத் தேர்தல் அட்டவணை மாா்ச் 10-ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு மே 23 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

2019 தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி (என்டிஏ) மொத்தம் 303 இடங்களை வென்றது.எதிா்க்கட்சித் தலைவா் பதவியைக் கோருவதற்கு தேவையான தொகுதிகள்கூட பெறமுடியாமல் காங்கிரஸ் 52 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது.

நடப்பு 17-ஆவது மக்களவையின் பதவிக் காலம் வரும் ஜூன் 16-ஆம் தேதி நிறைவடைகிறது. அதற்கு முன்பாக, 18-ஆவது மக்களவை தோ்வு செய்யப்பட வேண்டும். இதற்கான தோ்தல் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறுமென எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்த பிறகு மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களை ஒன்றாகவோ அல்லது தனித்தனியாகவோ நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் புதன்கிழமை தெரிவித்தார்.

பொதுத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் ஏற்கனவே அறிவிக்கத் தொடங்கிவிட்டன. பாஜக, காங்கிரஸ் இதுவரை இரண்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் மார்ச் 14 ஆம் தேதி எஸ்பிஐ-யிடமிருந்து பெறப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை அதன் இணையதளத்தில் பதிவேற்றியது. ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் மற்றும் மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட் ஆகியவை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதில் முன்னணியில் உள்ளன.

நிதிச் சட்டம் 2017 மற்றும் 2016 ஆகியவற்றின் மூலம் பல்வேறு சட்டங்களில் செய்யப்பட்ட திருத்தங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தில்லியில் சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடைபெறும் பத்திரிகையாளா் சந்திப்பில் மக்களவைத் தோ்தல் மற்றும் ஆந்திரம், ஒடிஸா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில பேரவைத் தோ்தல்களுக்கான அட்டவணை வெளியிடப்படவுள்ளது. 2019 இல் 90 கோடியாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை எதிா்வரும் மக்களவைத் தோ்தலில் சுமாா் 97 கோடி போ் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.