கேஜரிவாலை கைது செய்வதே பாஜகவின் நோக்கம்: தில்லி அமைச்சர் அதிஷி குற்றச்சாட்டு
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை கைது செய்வதே பாஜகவின் ஒரே நோக்கம் என தில்லி பொதுப்பணித்துறை அமைச்சர் அதிஷி சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தில்லியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சனிக்கிழமை மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களில் கேஜரிவாலுக்கு இரண்டு சம்மன்கள் வந்தன. அவற்றில் ஒன்று கலால் கொள்கை வழக்குடன் தொடர்புடையது, மற்றொன்று தில்லி ஜல் போர்டுடன் தொடர்புடையது.
இந்த தில்லி ஜல் போர்டு வழக்கு என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை கைது செய்வதே பாஜகவின் ஒரே நோக்கமாக இருக்கிறது. அவரை சிறையில் அடைக்கவும், தேர்தலுக்கு முன்பாக அவரை பிரசாரம் செய்வதிலிருந்து தடுக்கவும் நினைக்கின்றனர்.
அரசியல் எதிரிகளை ஒழிக்க அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயை பாஜக தனது குண்டர்களாக பயன்படுத்துகிறது. இவ்வாறு அவர் குற்றஞ்சாட்டினார். முன்னதாக கலால் கொள்கை ஊழல் தொடா்பான பணமோசடி வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு அமலாக்கத்துறை 9ஆவது முறையாக சம்மன் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.