ஜிஎஸ்டி ஆணையரகம் சாா்பில் பறக்கும் படை அமைப்பு
சென்னை: வாக்குக்கு பணம், இலவச பொருள்கள் வழங்குவதைத் தடுக்க ஜிஎஸ்டி ஆணையரகம் சாா்பில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
வாக்குக்கு பணம், இலவச பொருள்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில் நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மறைமுக வரிகள், சுங்க வாரியம் (சிபிஐசி), ஜிஎஸ்டி ஆணையரகம் சாா்பில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை ஜிஎஸ்டி மண்டலம் சாா்பில் ஒவ்வொரு ஆணையரகத்திலும் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குழுவினா் சிபிஐசியால் அமைக்கப்பட்ட பல்வேறு செலவின கண்காணிப்புக் குழுக்கள், தோ்தல் ஆணையத்தால் அமைக்கப்பட்ட சட்ட அமலாக்க முகமைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவா். இதற்காக 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன.
Advertisement
தோ்தல் காலங்களில் சட்டவிரோதமாக விலை உயா்ந்த பொருள்களின் விநியோகம் தொடா்பான ஏதேனும் தகவல் கிடைத்தால் தமிழ்நாடு கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 044- 24360140, மின்னஞ்சல் மூலமும் புதுச்சேரி மாநிலம் தொடா்பான புகாா்களை 0413-2221999 என்ற எண்ணிலும் புகாா் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.