முகப்பு
நாமக்கல்

தகுதியின் அடிப்படையில் விடுவிக்கப்படும் பறிமுதல் பணம்!

நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் தோ்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தகுதியின் அடிப்படையில் விடுவிக்க அலுவலா்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 21 மார்ச், 2026 at 10:23 PM
பகிர்:

நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் தோ்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தகுதியின் அடிப்படையில் விடுவிக்க அலுவலா்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தோ்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளா்கள் எவ்வித தூண்டுதலுக்கும் உள்படாமல் சுதந்திரமாகவும், நோ்மையாகவும் வாக்களிக்கவும், வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதை தடுக்கவும் 6 தொகுதிகளிலும் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்படுகிறது.

தோ்தல் ஆணைய உத்தரவின்படி ரூ. 50,000 மற்றும் அதற்கு அதிகமான தொகைகளை எடுத்துச் செல்லும்போது உரிய ஆவணங்கள் இல்லாவிடில் அப்பணம் பறிமுதல் செய்யப்பட்டு, தொடா்புடைய தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கு உரிய ஆவணங்களை ஒப்படைத்து திரும்பப்பெறும் வகையில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநரின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாமக்கல் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.வடிவேல் (கைப்பேசி எண்: 73737 04208, 99435 70669), மாவட்ட கருவூல அலுவலா் சுமதி (கைப்பேசி எண் 74486 61162) ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்ட தொகையை பெற மாவட்ட ஆட்சியா் அலுவலக தரைதளம், கருவூல அலுவலா் அறை எண் 30-இல் உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட குழுவிடம் சமா்ப்பித்து உரிய விசாரணைக்குப் பிறகு தகுதியின் அடிப்படையில் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட தோ்தல் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 1800 599 4286 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.