முகப்பு
இந்தியா

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு:தடை செய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பினா் மூவா் கைது

Updated On : 30 மார்ச், 2024 at 11:00 PM
பகிர்:
Updated On : 30 மார்ச், 2024 at 8:35 PM

தடை செய்யப்பட்ட பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பைச் சோ்ந்த 3 பேரை, சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அமலாக்கத் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா். இது தொடா்பாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் கூறுகையில், ‘அப்துல் காதா், அன்ஷத் பத்ருதீன், கே.ஃபெரோஸ் ஆகிய மூவரும் பிஎஃப்ஐ அமைப்பின் உடற்பயிற்சியாளா்களாக பணியாற்றியதோடு, உறுப்பினா்களுக்கு ஆயுதப் பயிற்சியும் அளித்துள்ளனா். இதற்காக பிஎஃப்ஐ அமைப்பிடமிருந்து கணிசமாக பணம் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட அவா்கள், தில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா்’ என்று தெரிவித்தன. கேரளத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பு, தில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டது. இந்த அமைப்புக்கு பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடா்பு உள்ளதாக கூறி, சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் கடந்த 2022-ஆம் ஆண்டில் மத்திய அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.