தேசியவாத காங். கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் மருத்துவமனையில் அனுமதி
உடல்நலக் குறைவு காரணமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான நவாப் மாலிக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததில் மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக்குக்கு தொடர்பு உள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி அமலாக்கத் துறை அவரை கைது செய்தது.
பின்னர் அவர் மும்பையில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் மருத்துவ காரணங்களுக்காக இடைக்கால ஜாமீனில் உள்ளார். இந்த நிலையில் மூச்சுத் திணறல் காரணமாக நவாப் மாலிக் சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாலிக் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என்பதை அவரது மகளும் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் உறுதிப்படுத்தினர்.